விரயமாகும் உணவுப் பொருள்களைத் தண்ணீராகவும் எருவாகவும் மாற்றும் ஒரு முன்னோடிச் செயல்திட்டம் தெம்பனிஸ் நகர் முழுவதிலும் இருக்கும் எல்லா அக்கம்பக்கங்களுக்கும் 2024 வாக்கில் விரிவுபடுத்தப்படும் என்று தெம்பனிஸ் நகர மன்றம் நேற்று அறிக்கையில் தெரிவித்தது.
தெம்பனிஸ் மேற்கில் உள்ள அக்கம்பக்க மையம் ஒன்றில் அமைக்கப்பட்டுள்ள 'விரய உணவுச் செரிமான' இயந்திரத்தைச் சென்ற ஆண்டு முதல் ஆறு நிறுவனங்கள் பயன்படுத்தி வருகின்றன.
நாள் ஒன்றுக்கு 400 கிலோ உணவுக்கழிவுகளை அந்த இயந்திரம் மூலம் அவை பயனுள்ள பொருள்களாக மாற்றுகின்றன. இந்தச் செயல்திட்டம் விரிவுபடுத்தப்படுவதைப்பற்றி அறிவிப்பதற்காக நேற்று ஒரு நிகழ்ச்சி நடந்தது.
தெம்பனிஸ் குழுத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினரான மசகோஸ் ஸுல்கிஃப்லி அதில் கலந்துகொண்டார். உணவுக் கழிவுகளை அதே இடத்தில் ஒழுங்கு படுத்துவதால் கரிமக் கழிவுகளைக் குறைக்கலாம்.
அவற்றை வேறு இடங்களுக்குக் கொண்டுசெல்ல வேண்டிய தேவை இல்லை என்பதால் செலவும் குறையும் என்றாரவர்.
இந்த முன்னோடி செயல்திட்டம், தெம்பனிஸ் கிழக்கில் உள்ள எண்2, தெம்பனிஸ் வடக்கில் உள்ள எண்4, தெம்பனிஸ் சுங்காட்டில் உள்ள ஓர் அக்கம்பக்க மையம் ஆகியவற்றுக்கு நீட்டிக்கப்படும்.
'விரய உணவுச் செரிமான' இயந்திரத்தின் விலை சுமார் $100,000 ஆகும். அது 2019ல் ஆறு மாத காலம் சோதிக்கப்பட்டது. பிறகு சென்ற ஆண்டு ஜனவரியில் அந்த இயந்திரம் தெம்பனிசில் புளோக் 823 ஏ குப்பைக்கூடத்தில் பொருத்தப்பட்டது. நுண்ணுயிரிகளைப் பயன்படுத்தி நாள் ஒன்றுக்கு 400 கிலோ உணவுக் கழிவுகளை அது தண்ணீராகவும் உரமாகவும் மாற்றி விடும். அப்படி உருவாக்கப்படும் தண்ணீரை குடிக்க முடியாது.
அது வடிகால்களில் விடப்படும். கிடைக்கும் உரம் குடியிருப்பாளர்களுக்கு விநியோகிக்கப்படும். உரத்தை நகர மன்றம் நிலப் பராமரிப்புக்காகப் பயன்படுத்துகிறது. உணவு கழிவுப்பொருள்களில் சுமார் 10% முதல் 15% இப்படி உரமாக மாற்றப்படுகிறது.
தெம்பனிசில் ஆறு காப்பிக்கடைகளும் இதர உணவு சில்லறை வர்த்தகக் கடைகளும் அந்த இயந்திரத்தைப் பயன்படுத்தத் தொடங்கும் என்று நகர மன்றம் தெரிவித்தது. அந்த இயந்திரம் இதுவரை 15 மாதங்களில் ஏறத்தாழ 44,100 கிலோ உணவு கழிவுப்பொருள்களைத் தண்ணீராகவும் உரமாகவும் மாற்றி இருக்கிறது.
இதனிடையே, இது பற்றி கருத்து தெரிவித்த தெம்பனிஸ் மேற்கு வர்த்தகச் சங்கத் தலைவரான ஆங் கிங் கியோங், 60, இந்த இயந்திரம் துர்நாற்றத்தைக் குறைத்துவிடுகிறது. கரப்பான்பூச்சி போன்ற பூச்சித் தொல்லைகளும் இதனால் குறைந்துவிடுகிறது என்று கூறினார்.
சிங்கப்பூரின் மொத்த கழிவுப்பொருள்களில் ஏறத்தாழ 11% விரயமாகும் உணவாக இருக்கிறது. 2020ல் சிங்கப்பூரில் மொத்த கழிவுப்பொருள் ஏறக்குறைய 665,000 டன்னாக இருந்தது. அதில் ஏறத்தாழ 126,000 டன் மறுபுழக்கத்திற்கு உட்படுத்தப்பட்டது என்று தேசிய சுற்றுப்புற முகவை கூறியது.