ஜூனில் பட்டத்தொழிலருக்கு மறு தேர்ச்சி போதிக்கும் வாழ்க்கைத்தொழில் மாற்றும் திட்டம்
மனிதவள நிபுணர்களுக்கான வாழ்க்கைத்தொழில் மாற்றும் திட்டம் வரும் ஜூன் மாதம் தொடங்கும். அந்தத் திட்டம் பட்டத்தொழிலர்களுக்குப் புதிய தேர்ச்சிகளைப் போதிக்கும்.
மனிதவள பகுப்பாய்வுகள், உத்திபூர்வ ஊழியர் அணித் திட்டம், மனிதவள தொழில்நுட்ப அறிவு உள்ளிட்ட பலவற்றையும் அந்தத் திட்டம் கற்றுக்கொடுக்கும் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. மனிதவள மூத்த துணை அமைச்சர் ஸாக்கி முகம்மது நேற்று புதிய செயல்திட்டம் பற்றி அறிவித்தார்.
'பட்டத்தொழிலர்களுக்கான மனிதவள மூலதன வாழ்க்கைத்தொழில் மாற்றும் திட்டம்' என்று குறிப்பிடப்படும் அந்தத் திட்டத்தை, 'சிங்கப்பூர் ஊழியரணி' அமைப்பு தொடங்கும் என்று அமைச்சர் கூறினார்.
சன்டெக் சிங்கப்பூர் மாநாடு, கண்காட்சி மையத்தில் மனிதவள தொழில்நுட்ப ஆசிய தொழில்துறை விழா கண்காட்சியைத் திறந்துவைத்து அமைச்சர் பேசினார்.
தேர்ச்சிகளையும் திறன்களையும் ஆயுள் முழுவதும் கற்றுக்கொள்ள ஊக்குவிக்கும் சிங்கப்பூர் ஊழியரணி அமைப்பின் மேற்பார்வையில் இத்தகைய 100க்கும் மேற்பட்ட செயல்திட்டங்கள் ஏற்கெனவே நடப்பில் உள்ளன.
அந்தத் திட்டங்கள், சிங்கப்பூரர்கள் நடுவில் தங்கள் வாழ்க்கைத் தொழிலை மாற்றிக்கொண்டு புதிய வாய்ப்புகள் மூலம் தங்கள் விருப்பங்களை நிறைவேற்றிக்கொள்ள உறுதுணையாக இருக்கின்றன.
சிங்கப்பூர் தேசிய முதலாளிகள் சம்மேளனமும் என்டியுசி கற்றல் நிலையமும் புதிய செயல்திட்டத்தை நிர்வகிக்கும்.
மனிதவள நிபுணர்கள் பயிலகம் உதவிக்கரம் நீட்டும். ஊழியர்களுக்கு அவ்வளவாக பாதிப்பு ஏற்படாத வகையில் புதிய செயல்திட்டம் வடிவமைக்கப்படும்.
செயல்திட்டத்தை நிர்வகித்து நடத்தும் பங்காளி நிறுவனங்கள், முதலாளிகளுக்கு உதவி ஊழியர்களின் பணியைத் திருத்தி அமைக்க முயலும்.
புதிய செயல்திட்டத்தில் ஏறக்குறைய 150 ஊழியர்களை ஈடுபடுத்த 80க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் ஆர்வம் தெரிவித்து இருப்பதாக திரு ஸாக்கி தமது உரையில் சுட்டிக்காட்டினார்.
எம்பிளாய்மெண்ட் பாஸ் அங்கீகாரத்திற்கான புள்ளிகள் அடிப்படையிலான புதிய ஏற்பாடு பற்றி மனிதவளத் துறையினர் தெரிந்துகொள்ள உதவும் வகையில் சிங்கப்பூர் மனிதவளப் பயிலகம், மனிதவள நிபுணர்கள் பயிலகம் ஆகிய அமைப்புகளுடன் அரசாங்கம் சேர்ந்து செயல்படும் என்றும் தமது உரையில் திரு ஸாக்கி குறிப்பிட்டார். விவரங்கள் பின்னர் வெளியிடப்படும் என்றார் அவர்.
சன்டெக் மாநாட்டு மையத்தில் அரங்கம் 403ல் நடக்கும் மனிதவள தொழில்நுட்ப ஆசிய தொழில்துறை விழா பார்வையாளர்கள் நேரடியாக கலந்துகொள்ளும் வகையில் நேற்று நடந்தது.
அது மே 13ஆம் தேதி வரை மெய்நிகர் ரீதியில் நடைபெறும்.