துணைப் பிரதமர் லாரன்ஸ் வோங் ஓராண்டு இடம்பெறவிருக்கும் கருத்து திரட்டும் நடவடிக்கை ஒன்றில் நான்காம் தலைமுறைத் தலைவர்கள் குழுவை வழிநடத்த இருக்கிறார்.
'ஃபார்வர்ட் சிங்கப்பூர்' எனப்படும் முன்னேறும் சிங்கப்பூர் திட்டம், குடிமக்களின் அக்கறைகளை புரிந்துகொள்வதிலும் அவர்களின் கருத்துகளுக்குச் செவிமடுப்பதிலும் கவனம் செலுத்தும். வருங்காலச் சவால்களை எதிர்கொள்ளும் வேளையில் சிங்கப்பூரர்கள் ஒற்றுமையுடன் இருப்பதற்கு உதவும் வகையில் பல்வேறு கொள்கைகள் குறித்து ஆய்வுசெய்து தேவைப்படும் மாற்றங்களைப் புகுத்தவும் இந்தத் திட்டம் வழிவகுக்கும்.
ஆறு முக்கிய அம்சங்களின்கீழ் பிரச்சினைகளை அடையாளம்கண்டு ஆய்வுசெய்வதில் நான்காம் தலைமுறைத் தலைவர்கள் சிங்கப்பூரர்களுடன் இணைந்து செயல்படுவர் என்று தொடர்பு, தகவல் அமைச்சு நேற்று தெரிவித்தது.
வலுப்படுத்துதல், ஆற்றலளித்தல், பராமரித்தல், உருவாக்குதல், வழிநடத்துதல், ஒன்றிணைத்தல் ஆகியவை இந்த முக்கிய அம்சங்கள்.
பொருளியலும் வேலைகளும் குறித்து ஆராயும் வலுப்படுத்துதல் பிரிவிற்கு மனிதவள அமைச்சர் டாட் சீ லெங், தேசியத் தொழிற்சங்கக் காங்கிரசின் தலைமைச் செயலாளர் இங் சீ மெங், மனிதவள, நீடித்த நிலைத்தன்மை, சுற்றுப்புற மூத்த துணையமைச்சர் கோ போ கூன் ஆகியோர் தலைமைதாங்குவர்.
நிச்சயமற்ற சூழலில் பொருளியல் போட்டித்தன்மை அதிகரித்துள்ள நிலையில், ஒவ்வொரு சிங்கப்பூரரும் வாழ்நாள் முழுமைக்கும் வேலைவாய்ப்பைப் பெறும் வகையில் வலுவூட்டுவது இந்தப் பிரிவின் இலக்கு.
ஆற்றலளித்தல் பிரிவிற்கு கல்வி அமைச்சர் சான் சுன் சிங், தற்காப்பு, மனிதவள மூத்த துணை அமைச்சர் ஸாக்கி முகமது, தொடர்பு, தகவல், தேசிய வளர்ச்சி மூத்த துணையமைச்சர் டான் கியட் ஹாவ் ஆகியோர் தலைமை வகிப்பர்.
சிங்கப்பூரர்கள் அனைவரும் எந்தவித வாழ்க்கைப் பின்னணியில் இருந்து வந்தவர்கள் என்றாலும் தங்கள் கனவுகளைப் புரிந்துகொண்டு அதற்கான திறன்களைக் கைக்கொண்டு வளர்ச்சிப் பாதையில் செல்ல வகைசெய்வதை கல்வியும் வாழ்நாள் கற்றலுக்குமான இந்தப் பிரிவு இலக்காகக் கொண்டிருக்கும்.
பராமரித்தல் பிரிவிற்கு சுகாதார அமைச்சர் ஓங் யி காங், சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சரும் இரண்டாம் சுகாதார அமைச்சருமான மசகோஸ் ஸுல்கிஃப்லி, நிதி, தேசிய வளர்ச்சி இரண்டாம் அமைச்சர் இந்திராணி ராஜா ஆகியோர் பொறுப்பு வகிப்பர்.
சிங்கப்பூரர் ஒவ்வொருவரும் திருப்தியான வாழ்க்கையை வாழவும் மேம்பட்ட முறையில் தங்களையும் தங்களைச் சுற்றியுள்ளோரையும் பராமரிக்கவும் கைகொடுப்பது சுகாதாரமும் சமூக ஆதரவும் தொடர்பான இதன் இலக்கு.
உருவாக்குதல் பிரிவை தேசிய வளர்ச்சி அமைச்சர் டெஸ்மண்ட் லீ, போக்குவரத்து அமைச்சர் எஸ். ஈஸ்வரன், தொடர்பு, தகவல் அமைச்சர் ஜோசஃபின் டியோ, வெளியுறவு, தேசிய வளர்ச்சி மூத்த துணையமைச்சர் சிம் ஆன் ஆகியோர் வழிநடத்துவர்.
சிங்கப்பூரர்களின் வாழ்க்கைச் சூழலை உருமாற்றி வருங்காலத்தில் அனைவருக்கும் மேம்பட்ட வசிப்பிடத்தை உருவாக்கித் தருவதும் இல்லமும் வாழும் சூழலும் தொடர்பான இந்தப் பிரிவின் இலக்கு.
வழிநடத்துதல் பிரிவு சுற்றுச்சூழலும் நிதி நிலைத்தன்மையும் குறித்து ஆய்வுசெய்யும்.
நீடித்த, நிலைத்தன்மை, சுற்றுப்புற அமைச்சர் கிரேஸ் ஃபூ, நாடாளுமன்ற நாயகர் டான் சுவான் ஜின், நிதி, போக்குவரத்து மூத்த துணையமைச்சர் சீ ஹொங் டாட் ஆகியோர் இந்தப் பிரிவிற்குத் தலைமை வகிப்பர்.
வருங்காலத் தலைமுறையினருக்காக நாட்டின் வளங்களைப் பொறுப்பான முறையில் கையாண்டு மேலும் நீடித்த நிலைத்தன்மை மிக்க வாழ்க்கைமுறையைப் பேணுவது இதன் இலக்கு.
இறுதியாக, சிங்கப்பூர் அடையாளத்துக்கான ஒன்றிணைத்தல் பிரிவிற்கு கலாசார, சமூக, இளையர்துறை அமைச்சர் எட்வின் டோங், கல்வி, வெளியுறவு இரண்டாம் அமைச்சர் மாலிக்கி ஒஸ்மான், தொடர்பு, தகவல், சுகாதார மூத்த துணையமைச்சர் ஜனில் புதுச்சேரி ஆகியோர் பொறுப்பு வகிப்பர்.
சிங்கப்பூரர் என்ற அடையாளம், சிங்கப்பூர்க் குடியுரிமை மீதான கடப்பாடு, பரஸ்பர நலனில் பொறுப்பு வகித்தல் போன்றவற்றைப் பேணுவதை இலக்காகக் கொண்டு இந்தப் பிரிவு செயல்படும்.
அடுத்த ஆண்டு மத்தியில் இந்த ஓராண்டு கருத்துத் திரட்டும் இயக்கம் நிறைவுறும்போது சிங்கப்பூரின் கொள்கைகள் தொடர்பான பரிந்துரைகளை அடக்கிய அறிக்கை தயாரிக்கப்படும். சிங்கப்பூரர்களிடையே பொதுவான விழுமியங்கள், நடைமுறைகள், மக்களுக்கிடையிலான தொடர்பு குறித்த புரிதல் ஆகியவற்றைத் தெரிந்துகொள்ள இது உதவும்.
நாட்டின் பொது இலக்குகளுக்குப் பங்களிக்க சமூகத்தின் பல்வேறு பிரிவினர் எவ்வாறு கூடுதலாகச் செயலாற்றலாம் என்பதைத் தெரிந்துகொள்ள இந்தக் கருத்துத் திரட்டு வகைசெய்யும் என்று கருதப்படுகிறது.
சிங்கப்பூரர்கள் இவை தொடர்பான கருத்துகளையும் யோசனைகளையும் பகிர்ந்துகொள்ள முன்வரவேண்டும் என்று அமைச்சுகள் கேட்டுக்கொண்டுள்ளன.
மேல்விவரங்களுக்கு 'www.forwardsingapore.sg' என்ற இணையத்தளத்தை நாடலாம்.
துணைப் பிரதமர் லாரன்ஸ் வோங் தலைமையில் இடம்பெறும் புதிய நடவடிக்கை