கஞ்சா புழங்கியதாக ஒப்புக்கொண்டதை அடுத்து தேசிய நீச்சல் வீரர்களான ஜோசஃப் ஸ்கூலிங், அமண்டா லிம் ஆகிய இருவருக்கும் உரிய ஆதரவு அக்டோபர் 1ஆம் தேதி முதல் ஒருமாதம் காலம் ரத்து செய்யப்படும் என்று ஸ்போர்ட் சிங்கப்பூர் (ஸ்போர்ட்எஸ்ஜி) அறிவித்துள்ளது.
சட்டவிரோதமான முறையில் தாங்கள் போதைப்பொருளைப் புழங்கியதாக ஆகஸ்ட் 30ஆம் தேதி அவ்விருவரும் ஒப்புக்கொண்டனர். அந்த இருவருக்கும் எச்சரிக்கை கடிதங்களையும் ஸ்போர்ட் சிங்கப்பூர் பிறப்பித்தது.
விளையாட்டு வீரர்கள் உடன்பாட்டை மீறிச் செயல்பட்டதற்காக தியோங் ஸென் வெய் என்ற தேசிய நீச்சல் வீரரும் தண்டிக்கப்பட்டதாக அந்த அமைப்பு தெரிவித்தது.
அந்த மூவரையும் போதைப்பொருள் தொடர்பான குற்றங்களைஒட்டி மத்திய போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு விசாரித்தது.
அவர்கள் மூன்று பேரின் சிறுநீரும் சோதிக்கப்பட்டது. ஆனால், அதில் போதைப் புழக்கத்திற்கான அறிகுறி தெரியவில்லை.
இருந்தாலும் சிங்கப்பூரை பிரதிநிதித்து வெளிநாட்டில் விளையாட்டில் கலந்துகொண்டபோது சட்டவிரோத போதைப்பொருளைத் தாங்கள் புழங்கியதாக அந்த மூவரும் ஒப்புக்கொண்டனர்.
ஸ்கூலிங், 27, லிம், 29, தியோங், 24, ஆகிய மூவரையும் தனது உள்விசாரணையையொட்டி தான் சந்தித்ததாகவும் அந்த விசாரணை சென்ற வாரம் முடிந்ததாகவும் ஸ்போர்ட் சிங்கப்பூர் தெரிவித்தது.
விளையாட்டு வீரர்கள் உடன்பாட்டின் ஒரு பகுதியாக அவர்கள் பல நடத்தை நியதிகளை நிறைவேற்ற வேண்டும். ஆனால், அதிலிருந்து அவர்கள் தவறிவிட்டார்கள் என்பது விசாரணை மூலம் தெரியவந்ததாக ஸ்போர்ட் சிங்கப்பூர் கூறியது.
இப்படி நியதிகளை மீறி விளையாட்டு வீரர்கள் நடந்துகொள்வதை கடுமையான ஒன்றாக இந்த அமைப்பு கருதுகிறது.