பெரும்பாலான வீடுகளில் இன்னமும் பிரதான பராமரிப்பாளர்களாக உள்ள மகளிர், ஊழியரணியில் சேர்ந்து அதில் நீடிக்க அதிக வாய்ப்பு இருப்பதாக அதிபர் ஹலிமா யாக்கோப் கூறியிருக்கிறார்.
வீட்டிலிருந்து வேலை செய்வது போன்ற நீக்குப்போக்குடைய வேலை நடைமுறைகளைக் கூடுதலான முதலாளிகள் இப்போது கடைப்பிடிக்கின்றனர். இச்சூழலில் ஊழியரணியில் மகளிரைத் தக்கவைத்துக்கொள்வதில் கூடுதல் கவனம் செலுத்தப்பட வேண்டும் என்று திருவாட்டி ஹலிமா சொன்னார்.
இஸ்தானாவில் என்டியுசி மகளிர் குழுத் தலைவிகளுடன் நேற்று நடைபெற்ற கலந்துரையாடலின்போது அவர் இக்கருத்தை முன்வைத்தார்.
"ஊழியரணியில் இருந்து வெளியேறி ஆண்டுக்கணக்கில் மகளிர் வேலையின்றி இருந்தால், அவர்களுக்கு மீண்டும் பயிற்சி அளித்து, வேகமாக மாறியுள்ள ஊழியரணியில் அவர்களை மீண்டும் இணைப்பது மிகவும் சிரமமாகிவிடும்.
"எனவேதான், ஊழியரணியில் அவர்களைத் தக்கவைத்துக்கொள்வதற்கான வழிமுறைகளை நாம் தேடவேண்டும். இதில்தான் நீக்குப்போக்கான வேலை நடைமுறைகள் முக்கிய பங்கு வகிக்கின்றன," என்றார் திருவாட்டி ஹலிமா.
மகளிர் ஊழியர்களின் மனக்குறைகளைச் செவிமடுக்கவும் ஆண்-பெண் ஏற்றத்தாழ்வு சரிசெய்யப்படுவதை உறுதிசெய்வதிலும் மகளிர் தலைவிகள் முக்கிய பங்கு வகிப்பதாக அவர் குறிப்பிட்டார்.
"ஆண்களையும் பெண்களையும் மக்கள் எப்படி பார்க்கின்றனர் என்பதன் தொடர்பிலான மனப்போக்கை நாம் மாற்ற வேண்டும். எடுத்துக்காட்டாக, பராமரிப்பாளர் பொறுப்புகளும் வீட்டு வேலைகளும் இன்னமும் மகளிரின் பொறுப்பாகக் கருதப்படுகின்றன," என்றார் திருவாட்டி ஹலிமா.
தொழிலாளர் இயக்கத்தில் பாதிப் பேர், அதாவது 298,000 பேர் மகளிராக உள்ளனர்.
"இத்தகைய வலுவான எண்ணிக்கை மூலம், வேலையிடங்களிலும் சமுதாயத்திலும் மகளிரைப் பாதிக்கும் விவகாரங்களில் குரல்கொடுக்க மகளிர் தொழிற்சங்கவாதிகள் நல்ல நிலையில் உள்ளனர்," என்று திருவாட்டி ஹலிமா கூறினார்.
குடும்ப உறுப்பினர்களைப் பார்த்துக்கொள்ளும் பொறுப்புடையவர்களுக்கு கூடுதலான முதலாளிகள் ஆதரவளிப்பர் என தாம் நம்புவதாக அவர் குறிப்பிட்டார்.