நெருங்கிய நண்பர் ஒருவர் 12 ஆண்டுகளுக்கு முன்பு உயிரை மாய்த்துக் கொண்டதால் பாதிக்கப்பட்ட தனியார் ஓட்டுநரான கைரியா ஹனிம் மஸ்லான், 44, தன்னுடைய காரில் பயணம் செய்யும் பயணிகளையும் உடல் ரீதியாக மட்டுமல்லாமல் மனரீதியாகவும் பாதுகாப்பாக அழைத்துச் செல்வதை தனது கடமையாக கொண்டு உள்ளார்.
"விடுமுறைக்குச் செல்கிறார்களா அல்லது இறுதிச் சடங்குக்குச் செல்கிறார்களா என்பது தெரியாது. நான் எப்போதும் பயணிகள் நலமாக இருக்கிறார்களா என்பதை தெரிந்துகொண்டு அவர்களுக்காக பிரார்த்தனை செய்வேன்," என்று திருவாட்டி கைரியா தெரிவித்தார்.
புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள வயதான இரு பெற்றோருக்கு நேரத்தை ஒதுக்குவதற்காக 2018ல் அவர் 'கோஜெக்' ஓட்டுநர் ஆனார்.
பயணிகளில் யாருக்காவது உயிரை மாய்த்துக்கொள்ளும் எண்ணம் இருக்கிறதா என்பதை அறியும் அவரது முயற்சிக்கு சில நேரங்களில் பலன் கிடைத்துள்ளது.
2021 செப்டம்பரில் பயணி ஒருவர், அலுவலகக் கட்டடத்தில் தற்கொலை செய்துகொள்ளப் போவதாகக் கூறிய சம்பவத்தை அவர் நினைவுகூர்ந்தார்.
காரின் பின்னால் அமர்ந்திருந்த அந்தப் பெண். பின் இருக்கையை கிழித்துக்கொண்டு இருந்ததை கைரியா கவனித்தார்.
"பின்னர் அவர் மனம் விட்டுப் பேசினார். கொவிட்-19 காலத்தில் வியாபார நெருக்கடியில் சிக்கிக்கொண்டதாக அவர் கூறினார். அவருக்கு அறிவுரை வழங்கிய பிறகு நாங்கள் காப்பி குடிக்கச் சென்றோம். அவரை பாதுகாப்பாக வீட்டுக்கு அனுப்பி வைத்தேன்," என்றார் கைரியா.
திருவாட்டி கைரியாவின் இத்தகைய தன்னலமற்ற சேவையை அங்கீகரிக்கும் வகையில் இவ் வாண்டின் ஸ்ட்ரைட்ஸ் டைம்ஸ் சிங்கப்பூரர் விருதுக்கு அவர் பெயர் முன்மொழியப்பட்டு உள்ளது.
சாதாரண சிங்கப்பூரர் சமூகத்தில் நல்ல விளைவுகளை ஏற்படுத்து வோரை பாராட்டுவதற்காக யுபிஎஸ் முதலீட்டு வங்கி இவ்விருதை வழங்குகிறது.
பூப்பாந்தாட்ட ஜோடியான டெர்ரி ஹீயும் ஜெசிக்கா டானும் இதே விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டு உள்ளனர்.
இவ்வாண்டு அக்டோபர் 2ஆம் தேதி திருமணம் செய்துகொண்ட இவர்கள், இரட்டையர் பூப்பாட்ட போட்டிகளில் தற்போது கொடிகட்டி பறக்கின்றனர்.
கடந்த 12 மாதங்களில் மட்டும் நான்கு பொது விருது போட்டிகளில் பதக்கங்களை வென்றுள்ளனர். அக்டோபர் 2021ல் செக் குடியரசு போட்டி முதல் ஜனவரியில் இந்திய பொது விருது, ஏப்ரலில் ஃபிரான்சில் நடைபெற்ற 'ஓர்லின்ஸ் மாஸ்டர்ஸ்' வரை இருவரும் பல பதக்கங்களை வென்றுள்ளனர்.
உச்சக்கட்டமாக ஆகஸ்ட் மாதம் இங்கிலாந்தில் நடைபெற்ற காமன்வெல்த் போட்டியில் அற்புத மான வெற்றியை அவர்கள் சாதித்தனர்.
"அர்த்தமுள்ள விருதுக்கு எங்கள் பெயரை முன்மொழிந்துள்ளது பெருமையாகவும் கௌரவமாகவும் இருக்கிறது," என்று ஜெசிக்கா டான், 29 கூறினார்.
"எங்களுடைய பயணம் அவ்வளவு எளிதானதல்ல. பல்வேறு பின்னடைவுகளைச் சந்தித்திருக் கிறோம்," என்று அவர் குறிப்பிட்டார்.
2024ஆம் ஆண்டில் பாரிஸ் நகரில் நடைபெறும் ஒலிம்பிக் விளையாட்டுகளில் தகுதி பெறுவதே அவர்களுடைய முன்னுரிமையாக உள்ளது. எட்டாவது ஆண்டாக ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் சிறந்த சிங்கப்பூரருக்கான விருது இவ் வாண்டு வழங்கப்படவிருக்கிறது.
கடந்த ஆண்டு சக்திபாலன் பாலதண்டாயுதம் இவ்விருதை பெற்றார்.
இளம் தம்பதியர் இணையம் வழி விடுத்த வேண்டுகோளை ஏற்று அவர்களது ஒரு வயது மகளுக்கு தனது கல்லீரலின் ஒரு பகுதியை அவர் தானமாக வழங்கி இருந்தார்.