பொன்மணி உதயகுமார்
சட்ட ஆலோசனை அனைவருக்கும் சென்றடைய வேண்டும் என்ற நோக்கில் ‘புரோ போனோ எஸ்ஜி’ அமைப்பு ஹவ்காங் அவென்யூ 5ல் சமூக இலவச சட்ட உதவி நிலையம் ஒன்றை நேற்று முன்தினம் திறந்தது.
‘டியன் ட’ கோயில் வளாகத்தில் இது அமைந்துள்ளது.
நிலையத்தின் திறப்பு விழாவில் கலாசார, சமூக, இளையர்துறை அமைச்சரும் சட்ட இரண்டாம் அமைச்சருமான எட்வின் டோங் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார்.
சிறந்த சட்ட அமைப்பைக் கொண்டிருப்பதோடு அந்தச் சட்டம் அனைவரும் அணுகக்கூடியமுறையில் இருப்பதை உறுதிசெய்வதும் அவசியம் என்று அமைச்சர் தமது உரையில் கூறினார்.
நிதி, குடும்பம், சமூகம் ஆகியவற்றில் ஏற்படக்கூடிய சிக்கல்களைச் சமாளிக்க இந்நிலையம் உதவுமென்றார் அமைச்சர்.
இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, மேலும் நான்கு குடியிருப்புப் பேட்டைகளில் இத்தகைய நிலையங்கள் திறக்கப்படும்.
கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 20ஆம் தேதி ‘புரோ போனோ எஸ்ஜி’, ‘ஆர் எஸ் சாலமன்’ அறக்கட்டளை, சிங்கப்பூர் சமூக அறிவியல் பல்கலைக்கழகம், ‘டியன் ட’ கோயில் ஆகியவற்றுக்கு இடையில் கையெழுத்தான புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் ஓர் அங்கமாக இந்த நிலையம் அமைக்கப்பட்டுள்ளது.
“சட்டம் குறித்த அறிதல் இல்லாமலோ எங்கு சென்று உதவி நாடுவதென அறியாமலோ இருப்பவர்கள் இங்கு ஆலோசனை பெற்றுக்கொள்ளலாம்,” என்று ‘புரோ போனோ எஸ்ஜி’ அமைப்பின் தலைவர் கிரெகரி விஜயேந்திரன்கூறினார்.
தேசிய அளவில் அறிவிக்கப்பட்டிருக்கும் சட்ட உதவித் திட்டங்களின் தகுதி வரம்புகளுக்குள் உட்படாதவர்கள் இந்த சமூக இலவச சட்ட உதவி நிலையத்தை அணுகலாம். எடுத்துக்காட்டாக, சிங்கப்பூரர்களின் வாழ்க்கைத் துணை, பெற்றோர் ஆகியோர் வெளிநாட்டுக் குடியுரிமை கொண்டிருந்தாலும் இங்கு சட்ட உதவி பெறலாம்.
சமூக சேவைத் துறையுடன் அணுக்கமாக இந்நிலையம் செயல்படும்.
“குடும்பச் சேவை நிலையங்களுக்கு அருகே சட்ட உதவி நிலையங்கள் அமைவதால் சட்டச் சிக்கல்கள், சமூகப் பிரச்சினை ஆகியவற்றால் அவதியுறும் மக்களுக்கு எளிதில் உதவ முடியும்,” என்று குடும்பச் சேவை நிலையங்களின் சமூக சேவகர் கௌசல்யா சிங் கூறினார்.
குறிப்பாக வடகிழக்கு வட்டாரத்தில் வசிக்கும் குடியிருப்பாளர்களுக்கு இந்த நிலையம் பேருதவியாக அமையும் என்றார் அவர்.
மக்கள் அதிகம் எதிர்நோக்கக் கூடிய சட்டச் சவால்களை சமாளிக்கும் வழிமுறைகள் பற்றிய அறிதலை அதிகரிக்கும் முயற்சிகளிலும் நிலையம் ஈடுபடும்.
அதோடு சமூகத் தலைவர்கள் நேரடியாக வழக்கறிஞர்களுடன் உரையாட உதவி, அவர்களுக்கு எழும் சட்ட உதவி சார்ந்த சந்தேகங்களையும் இது தீர்க்கும்.