மோசடிகள், இணைய சூதாட்டம், பாலியல் வன்கொடுமை சம்பந்தப்பட்ட பொருள்கள் விநியோகம், வெளிநாட்டுத் தலையீடு போன்ற இணையவழிக் குற்றச்செயல்கள் தொடர்ந்து உருமாறி வருகின்றன.
இத்தகைய குற்றச்செயல்களை எதிர்கொள்வதில் குறைபாடுகள் இருப்பதாக உள்துறை இரண்டாம் அமைச்சர் ஜோசஃபின் டியோ கூறியுள்ளார்.
சிங்கப்பூரர்களின் பாதுகாப்புக்கு இவை மிரட்டல் விடுப்பதால், உடல் ரீதியிலான மிரட்டல்கள் எதிர்கொள்ளப்படும் அதே விதத்தில் இவை எதிர்கொள்ளப்பட வேண்டும் என்றார் அவர்.
இதன் பொருட்டு, இணையவழிக் குற்றச்செயல் தீங்குகள் சட்டத்தை உள்துறை அமைச்சு இவ்வாண்டு அறிமுகப்படுத்தும் என்று திருமதி டியோ தெரிவித்தார்.
உள்துறை அமைச்சின் நிதி ஒதுக்கீட்டு விவாதத்தின்போது நேற்று நாடாளுமன்றத்தில் பேசிய அவர், “இணையத்தளத்தில் தொழில்நுட்பம் கடைப்பிடிக்கப்படுவதில் அரசாங்கம் உத்தரவிடவோ கட்டுப்பாடுகளை விதிக்கவோ இல்லை.
“எனினும், உடல் ரீதியிலான மிரட்டல்களைப் போலவே இணையத் தீங்கிலிருந்தும் குடிமக்களைப் பாதுகாப்பதில் எங்களுக்குக் கடமை உள்ளது,” என்று திருமதி டியோ விவரித்தார்
முன்மொழியப்பட்ட சட்டம், இணையக் குற்றவியல் நடவடிக்கைகளுக்குப் பொருந்தக்கூடிய ஒழுங்குமுறை அம்சங்களை விரிவுபடுத்தும். கூடுதலான பிரிவுகளுக்கு எதிராக அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க முடியும். இணையத் தீங்குகளைத் திறம்படக் கையாள அச்சட்டம் நடவடிக்கைகளை அறிமுகப்படுத்தும்.
வன்முறையைத் தூண்டுதல் போன்று நிதர்சன உலகில் குற்றச்செயல்களை ஒருங்கிணைக்கும் தொடர்புகளை நிறுத்த அல்லது நீக்க அதிகாரம் வழங்கப்படும்.
முன்மொழியப்பட்ட சட்டம், அனைத்து வகை இணையத் தொடர்புகளையும் உள்ளடக்கும். மோசடிகள் போன்ற அதிநவீன இணைய நடவடிக்கைகளைக் கண்டறிந்து அவற்றைக் குறைப்பதற்கான நடவடிக்கைகளை சட்டம் அறிமுகப்படுத்தும்.
தீங்கு விளைவிக்கும் வெவ்வேறு வகையான இணைய உட்பொருள்களையும் நடத்தையையும் கையாள காலப்போக்கில் அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வந்துள்ளதாக திருமதி டியோ கூறினார்.
எனினும், அவற்றைக் கையாளுவதில் இன்னும் குறைபாடுகள் இருப்பதாகச் சொன்ன அவர், குற்றச்செயல்களைத் தூண்டும் இணைய உட்பொருள் இன்னும் உள்ளதாகக் கூறினார்.
குறிப்பாக, ‘லூட் பாக்சஸ்’ போன்ற உருமாறிவரும் இணைய சூதாட்ட போக்கை உள்துறை அமைச்சு அணுக்கமாகக் கண்காணித்து வருவதாக திருமதி டியோ தெரிவித்தார்.
“சூதாட்ட விதிகளின் செயல்திறனை நாங்கள் தொடர்ந்து கண்காணித்து, ஒழுங்குமுறை குறித்த அணுகுமுறையைத் தேவைக்கேற்ப புதுப்பிப்போம்,” என்றார் அவர்.