தகவல் தொடர்பு ஊடக மேம்பாட்டு ஆணையத்தின் வாழ்க்கைக்கான மின்னிலக்கம் என்னும் இயக்கம் ஐக்கிய நாட்டு அமைப்பு முகவையின் விருதைப் பெற்றுள்ளது.
ஐநாவின்கீழ் இயங்கும் அனைத்துலகத் தொலைத் தொடர்பு ஒன்றியம் ஏற்பாடு செய்த தகவல் சமூகம் மீதான உலக உச்சநிலைக் கூட்டத்தில் இந்த இயக்கம் தலைசிறந்த திட்டம் என்னும் விருதுக்குத் தேர்வு செய்யப்பட்டது.
வாழ்க்கைக்கான மின்னிலக்க இயக்கம், ‘அனைத்துலகத் தொலைத்தொடர்பு ஒன்றியத்தை மேம்படுத்துவதில் அரசாங்கங்களுக்கும் எல்லா அமைப்புகளுக்கும் உள்ள பங்கு’ என்னும் பிரிவில் இந்த விருதுக்குத் தகுதிபெற்றதாக ஆணையத்தின் செய்திக்குறிப்பு தெரிவிக்கிறது.
இதேபோல 18 பிரிவுகளை உள்ளடக்கிய தேர்ந்தெடுப்புக்கு உலகம் முழுவதும் இருந்து 900 திட்டங்கள் பரிந்துரைக்கப்பட்டு இருந்தன.அவற்றில் சிறந்தவற்றைத் தேர்வு செய்வதற்கான வாக்கெடுப்பில் 1.5 மில்லியன் பேர் கலந்துகொண்டனர்.
அத்துடன், நிபுணர்களின் மறுஆய்வுக்கும் அவை உட்படுத்தப்பட்டு இறுதித் தேர்ந்தெடுப்பு நடைபெற்றது.வாழ்க்கைக்கான மின்னிலக்க இயக்கம் கடந்த 2021 பிப்ரவரி 8ஆம் தேதி அதிபர் ஹலிமா யாக்கோப்பால் தொடங்கி வைக்கப்பட்டது.
பொதுத் துறை, தனியார் துறை உள்ளிட்ட சமூகத்தின் எல்லாப் பிரிவுகளிலும் உள்ள சிங்கப்பூரர்கள் வாழ்நாள் முழுவதும் மின்னிலக்கத்தைத் தழுவவும் மின்னிலக்கத் தொழில்நுட்பம் வழியாக அவர்களது வாழ்வை வளப்படுத்தவும் ஊக்கப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டது இந்த இயக்கம்.
இதுவரை இந்த இயக்கத்தில் பங்கேற்ற அமைப்புகளின் எண்ணிக்கை 130க்கும் மேல் அதிகரித்ததோடு இயக்கம் முன்னின்று நடத்திய திட்டங்களின் எண்ணிக்கை 140க்கும் மேல்.
இந்த ஏற்பாடுகளால் இளையர், மூத்தோர், குறைந்த வருமானத்தினர், குடும்பங்கள், பெண்கள் மற்றும் உடற்குறையுள்ளோர் என பல்வேறு தரப்பினரையும் உள்ளடக்கிய 270,000 சிங்கப்பூரர்கள் பலனடைந்துள்ளனர்.