வொல்பாக்கியா திட்டம் சிங்கப்பூரில் ஒரு மில்லியனுக்கும் அதிகமான குடியிருப்பாளர்களுக்குப் பலனைத் தந்துள்ளது.
இத்திட்டத்தின்கீழ் வொல்பாக்கியா பக்டீரியா செலுத்தப்பட்ட ஆண் கொசுக்கள் வெளியே விடப்படுகின்றன.
இந்த ஆண் கொசுக்களுடன் ஏடிஸ் பெண் கொசுக்கள் இனப் பெருக்கத்தில் ஈடுபடும்போது அவற்றின் முட்டைகள் குஞ்சு பொரிக்காது.
டெங்கிக் காய்ச்சலை ஏற்படுத்தும் ஏடிஸ் கொசுக்களின் எண்ணிக்கை குறைந்தால் அந்நோயால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும் சரிவு காணும் என்று கூறப்படுகிறது.
இந்த வொல்பாக்கியா திட்டம் 13 வட்டாரங்களில் நடைமுறைப்படுத்தப்பட்டது.
வீடமைப்பு வளர்ச்சிக் கழகக் குடியிருப்புக் கட்டடங்களில் 30 விழுக்காட்டு கட்டடங்களிலும் தனியார் தரை வீடுகளில் பத்து விழுக்காட்டு வீடுகளிலும் இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட்டது. இந்நிலையில், தெம்பனிஸ், ஈசூன், சுவா சூ காங், புக்கிட் பாத்தோக் ஆகிய வட்டாரங்களில் ஏடிஸ் கொசுக்களின் எண்ணிக்கை 90 விழுக்காடு சரிந்திருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வட்டாரங்களில் டெங்கிக் காய்ச்சலால் அவதியுறுவோர் எண்ணிக்கை 88 விழுக்காடு குறைந்துள்ளது.
திட்டம் செயல்படுத்தப்பட்ட இந்த வட்டாரங்களில் 96 விழுக்காடு குடியிருப்பாளர்கள் வொல்பாக்கியா திட்டத்துக்கு ஆதரவு தெரிவிப்பதாக ஆய்வு தெரிவிக்கிறது.
திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்ட வட்டாரங்களிலிருந்து பெறப்படும் தரவுகளை தேசிய சுற்றுப்புற வாரியம் ஆய்வு செய்து ஏடிஸ் கொசுக்களின் எண்ணிக்கையைக் குறைக்க மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளை அவற்றைப் பயன்படுத்தி மேம்படுத்தும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கூடுதல் வொல்பாக்கியா கொசுக்களை வெளியே விட தனது பங்காளிகளுடன் வாரியம் இணைந்து செயல்படும்.
இத்திட்டத்துக்குத் தானியங்கி முறையும் பயன்படுத்தப்படக்கூடும் என்று அறியப்படுகிறது.
ஜென் சிங்கப்பூர் தங்ளின் ஹோட்டலில் நேற்று காலை நடைபெற்ற ஏழாவது சிங்கப்பூர் அனைத்துலக டெங்கிப் பயிலரங்கில் கலந்துகொண்ட நீடித்த நிலைத்தன்மை, சுற்றுப்புற அமைச்சின் மூத்த நாடாளுமன்றச் செயலாளர் பே யாம் கெங், வொல்பாக்கியா திட்டத்தால் ஏற்பட்டுள்ள நன்மைகளை மேற்கோள் காட்டினார்.
அடுத்த சில ஆண்டுகளில் மேலும் பல வட்டாரங்களுக்கு இத்திட்டத்தை விரிவுபடுத்த தேசிய சுற்றுப்புற வாரியம் திட்டமிட்டுள்ளதாக அவர் கூறினார்.
வொல்பாக்கியா திட்டம் பற்றி முதலில் சில குடியிருப்பாளர்களுக்குத் தெரியவில்லை என்றும் திடீரென்று நிறைய கொசுக்களைத் தங்கள் குடியிருப்பு வட்டாரத்தில் பார்த்ததும் அவர்கள் பதற்றம் அடைந்தனர் என்றும் தெரிவிக்கப்பட்டது.
கடந்த ஆண்டு சிங்கப்பூரில் 32,000 டெங்கி சம்பவங்கள் பதிவாகின. அத்துடன் அந்நோயால் 19 பேர் மாண்டனர்.
டெங்கியால் 2021ஆம் ஆண்டில் பதிவான மரணங்களைவிட இது நான்கு மடங்கு அதிகம்.
இம்மாதம் 5ஆம் தேதி நிலவரப்படி இவ்வாண்டில் இதுவரை 2,944 பேருக்கு டெங்கி காய்ச்சல் ஏற்பட்டுள்ளது.