வளர்ச்சிக் குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ள சிறார்கள் பாலர் பள்ளி வகுப்பறைகளில் கூடுதல் ஆதரவைப் பெற உதவும் முன்னோடித் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
வளர்ச்சி ஆதரவு நிபுணத்துவத் திட்டம் என்பது அதன் பெயர்.
‘என்டியுசி ஃபர்ஸ்ட் கேம்பஸ்’ பாலர் பள்ளி, இவ்வாண்டு ஜனவரி மாதம் அத்திட்டத்தைத் அறிமுகப்படுத்தியது.
நேற்று அதிகாரபூர்வமாகத் அது தொடங்கப்பட்டது.
வளர்ச்சிக் குறைபாடு உள்ள பிள்ளைகளை வகுப்பறையில் மேம்பட்ட முறையில் ஈடுபடுத்த உதவும் வளங்களை ஆசிரியர்களுக்கு வழங்குவது அத்திட்டத்தின் நோக்கம்.
தற்போது அதில், ஏழு ‘மை ஃபர்ஸ்ட் ஸ்கூல்’ நிலையங்களைச் சேர்ந்த 60 பிள்ளைகளும் 50 கல்வியாளர்களும் பங்குபெறுகின்றனர். ஜூலை மாதம் மேலும் ஒரு நிலையம் சேர்த்துக்கொள்ளப்படும்.
கண்-கை ஒருங்கிணைப்பு நடவடிக்கை, உணவு உட்கொள்ளல் போன்ற அன்றாட வாழ்க்கை தொடர்பான நடவடிக்கைகள், தொடர்புத்திறன் போன்றவற்றை மேம்படுத்த ஒவ்வொரு குழந்தைக்கும் உகந்த தனிப்பட்ட இலக்குகளை அடையாளம்காண பாலர் பள்ளி ஆசிரியர்களுக்கு அந்த நிபுணத்துவக் கல்வியாளர்கள் உதவுவர்.
வகுப்பறை நிர்வாகத்தை மேம்படுத்தவும் ஆசிரியர்களுக்கு அவர்கள் ஆலோசனை கூறுவர்.
தொடக்க நிகழ்ச்சியில், சமுதாய, குடும்ப மேம்பாட்டுத் துணையமைச்சர் சுன் ஷுவெலிங் கலந்துகொண்டார்.
அனைவரையும் உள்ளடக்கிய பாலர் பள்ளிகள், வளர்ச்சிக் குறைபாடு உள்ள பிள்ளைகளுக்கு மேம்பட்ட ஆதரவு ஆகியவை தொடர்பில் ‘எக்டா’ எனப்படும் பாலர் பருவ மேம்பாட்டு அமைப்பு மேற்கொள்ளும் முயற்சிகளுக்கு, புதிய வளர்ச்சி ஆதரவு நிபுணத்துவத் திட்டம் வலுசேர்ப்பதாக அவர் தமது உரையில் குறிப்பிட்டார்.