தனியாக வாழ விரும்பும் முதியோருக்குத் தேவையான வசதிகளுடன் புதிய தனியார் குடியிருப்பு சிங்கப்பூரில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இக்குடியிருப்பு 200 வீடுகளைக் கொண்டிருக்கும்.
முதியோருக்குத் தேவையான அம்சங்களைக் கொண்டிருக்கும் இந்தக் குடியிருப்பைக் கட்டும் உரிமை பெரேனியல் ஹோல்டிங்ஸின் துணை நிறுவனத்துக்கு வழங்கப்பட்டுள்ளது.
பெரி அவென்யூவில் கட்டப்படும் இந்த வீடுகள் மூத்தோருக்கான குடியிருப்பை அடுத்த கட்டத்துக்குக் கொண்டு செல்வதாக எட்மண்ட் டாய் சொத்து ஆலோசனை நிறுவனத்தின் ஆய்வுப் பிரிவுத் தலைவர் திரு லாம் செர்ன் வூன் தெரிவித்தார்.
195,000 சதுர அடி பரப்பளவில் இந்தக் குடியிருப்பு கட்டப்படுகிறது.
அதில் 100 படுக்கைகள் கொண்ட தாதிமை இல்லம், முதியோர் பராமரிப்பு நிலையம், முதியோர் நல்வாழ்வு பொழுதுபோக்கு நிலையம், சமூகப் பூங்கா ஆகியவை இடம்பெறும் என்று பெரேனியல் நிறுவனம் நேற்று முன்தினம் தெரிவித்தது.
பராமரிப்பு அம்சங்களுடனான குடியிருப்பை அதனுடன் தொடர்புடைய நிறுவனங்களுடன் சேர்ந்து சுகாதார அமைச்சும் நகர மறுசீரமைப்பு ஆணையமும் உருவாக்குகிறது.