சிங்கப்பூர் ஆயுதப் படைகளின் ஆகச் சிறந்த போர்ப் பிரிவாக ராணுவத்தின் முதலாம் மின்னற்படைப் பட்டாளம் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விருதை இப்பிரிவு கடந்த 20 ஆண்டுகளாக வென்று வந்துள்ளது.
இப்பிரிவில் ஆக அதிக விருது வென்ற பிரிவாக இப்பட்டாளம் திகழ்கிறது. சிங்கப்பூர் ஆயுதப் படைகளின் ஆகச் சிறந்த பிரிவுப் போட்டி 1969ஆம் ஆண்டில் தொடங்கியது. அன்றுமுதல் இந்த விருதை இந்தப் பட்டாளம் 37 முறை கைப்பற்றியுள்ளதாகத் தற்காப்பு அமைச்சு நேற்று தெரிவித்தது.
கடந்த 20 ஆண்டுகளாக இந்த விருதைத் தமது பட்டாளம் வென்று வருவதால் எப்படியிருந்தாலும் விருது தமது பட்டாளத்துக்குத்தான் கிடைக்கும் என்று பலர் நினைப்பது இயல்பானது என்று முதலாம் மின்னற்படைப் பட்டாளத்துக்குத் தலைமைதாங்கும் அதிகாரியான மேஜர் டான் ருயி லின் கூறினார்.
ஆனால் தமது பிரிவைச் சேர்ந்த மின்னல்படையினர் மெத்தனப்போக்குடன் நடந்துகொள்வதில்லை என்றார் அவர்.
“விருதைத் தொடர்ச்சியாகப் பலமுறை வென்றுள்ளோம். மெத்தனப்போக்குடன் இருந்துவிடாமல் தொடர்ந்து மேம்பட இது எங்களுக்கு நல்லதொரு வாய்ப்பாக அமைகிறது. தொடர்ந்து மேம்பட வேண்டும் என்ற மனப்பான்மையுடன் எப்போதும் செயல்படுகிறோம்,” என்று 32 வயது மேஜர் டான் தெரிவித்தார்.
இப்பட்டாளம் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி வருகிறது. இது அதன் பயற்சிமுறையில் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. அதிதுல்லியமாகச் செயல்படவும் போர்க் காலத் தயார்நிலையை மேம்படுத்தவும் இந்த அணுகுமுறை இப்பட்டாளத்துக்குக் கைகொடுத்துள்ளது.
மொத்தம் 18 படைப் பிரிவுகளுக்கும் 12 தேசிய சேவைப் பிரிவுகளுக்கும் இந்த விருதுகள் மூலம் அங்கீகாரம் வழங்கப்படுகிறது. ஆகச் சிறந்த தேசிய சேவைப் பிரிவுக்கான போட்டி 1993ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்டது.
விருதுகளை அதிபர் ஹலிமா யாக்கோப்பும் தற்காப்பு அமைச்சர் இங் எங் ஹென்னும் சனிக்கிழமையன்று சாஃப்டி ராணுவப் பயிற்சிக் கழகத்தில் வழங்குவர்.