வெஸ்ட் கோஸ்ட் சந்தை, ஆயர் ராஜா உணவு நிலையம் ஆகியவற்றுக்கு அருகில் வசிக்கும் முதியோர் இனிமேல் தங்கள் அக்கம்பக்கத்தில் அதிக நிம்மதியுடன் நடமாடலாம்.
அந்தப் பகுதியில் செல்லும் வாகனங்களின் வேகத்தைக் குறைக்கும் வகையில் சாலைகளில் திருத்தங்கள் செய்யப்பட்டு இருக்கின்றன.
சாலைகளை நடையர்கள் கடந்து செல்வதும் எளிதாக்கப்பட்டு இருக்கிறது. இந்தப் பணிகள் எல்லாம் ஞாயிற்றுக்கிழமை அதிகாரபூர்வமாக முடிவடைந்து இருக்கின்றன.
கிளமெண்டி வெஸ்ட் ஸ்திரீட் 2ன் 800 மீட்டர் நீளப் பகுதியும் வெஸ்ட் கோஸ்ட் டிரைவின் 400 மீட்டர் நீளப் பகுதியும் முதியோர் மண்டலங்களாக வகைப்படுத்தப்பட்டு இருக்கின்றன.
அந்தப் பகுதிகளில் வாகன வேக வரம்பு ஒரு மணிக்கு 40 கி.மீ. என்று குறைக்கப்பட்டு இருக்கிறது.
சாலையை கடந்து செல்லும்போது அதிக நேரம் பச்சை விளக்கு எரியும். தடையில்லாமல் சாலைகளைக் கடந்து செல்ல வசதிகள் இருக்கும்.
இந்த இரண்டு மண்டலங்களையும் சேர்த்து சிங்கப்பூரில் மொத்தம் 30 முதியோர் மண்டலங்கள் உருவாக்கப்பட்டு இருப்பதாக போக்குவரத்து அமைச்சர் எஸ் ஈஸ்வரன் ஞாயிற்றுக்கிழமை சமூக நிகழ்ச்சி ஒன்றில் தெரிவித்தார்.
சிங்கப்பூர் முழுவதும் 2025வது ஆண்டு வாக்கில் 50 முதியோர் மண்டலங்களை அமைக்க வேண்டும் என்று நிலப் போக்குவரத்து ஆணையம் இலக்கு நிர்ணயித்து இருக்கிறது.
அந்த இலக்கு திட்டமிட்டபடி நிறைவேறி வருகிறது என்று அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
தெம்பனிஸ் ஸ்திரீட் 32, 33ல் அமையும் அத்தகைய ஒரு மண்டலம் ஜூலை முடிவில் தயாராகிவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
முதியோர் மண்டலங்களில் பாதுகாப்பை மேலும் மேம்படுத்தும் நோக்கத்தில் சில மண்டலங்களில் வாகன வேக வரம்பு ஒரு மணிக்கு 30 கி.மீ. ஆக குறைக்கப்பட்டு உள்ளது.
இந்த ஏற்பாட்டை மேலும் பல மண்டலங்களில் நடைமுறைப்படுத்த ஆணையம் திட்டமிடுகிறது.
‘‘சிங்கப்பூரில் மூத்த குடிமக்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. நம்முடைய சாலைகள், வீதிகள் அனைத்தும் அனைவருக்கும் வசதியானதாக, தோதானதாக இருக்க வேண்டும் என்பதே நமது விருப்பம்.
‘‘ஏற்கெனவே ‘தோழமை வீதிகள்’ என்ற ஒரு செயல்திட்டத்தைத் தொடங்கி இருக்கிறோம்.
‘‘அந்தத் திட்டம் முதியோர் மண்டல திட்டத்திற்கு பலம் சேர்க்கும்,’’ என்றும் அமைச்சர் தெரிவித்தார்.
தோழமை வீதிகள் செயல்திட்டம் பற்றி கடந்த மார்ச் மாதம் அறிவிக்கப்பட்டது. அங் மோ கியோ, புக்கிட் பாத்தோக் வெஸ்ட், தெம்பனிஸ், தோ பாயோ, வெஸ்ட் கோஸ்ட் ஆகியவற்றில அந்தத் திட்டம் பரிசோதித்துப் பார்க்கப்படும்.
இந்த இடங்கள் ஒவ்வொன்றுக்கும் ஒரு சிறப்புப் பணிக்குழுவை அமைக்கும் நடைமுறையில் ஆணையம் இப்போது ஈடுபட்டு வருகிறது.
அடுத்த சில மாதங்களில் சமூகத்தையும் ஈடுபடுத்தி இடம்பெறும் இந்தப் பணிகள் இந்த ஆண்டு முடிவு வாக்கில் தொடங்கும்.
குடியிருப்பாளர்கள், சாலைகளைப் பயன்படுத்துவோர் எல்லாரும் சேர்ந்து ஒத்துழைத்தால்தான் இந்தப் பணிகள் எல்லாம் விரும்பியப் பலனைத் தரும் என்று வெஸ்ட் கோஸ்ட் மக்களிடம் அமைச்சர் ஈஸ்வரன் வலியுறுத்திக் கூறினார்.