சிங்கப்பூரின் 22 வயதிற்குட்பட்டோர்க்கான காற்பந்து அணி செப்டம்பர் மாதம் நடக்கவுள்ள ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்காது என்று சிங்கப்பூர் காற்பந்து சம்மேளனம் செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளது.
தென்கிழக்காசிய போட்டிகளில் காற்பந்து அணியின் செயல்பாட்டாலும் போட்டி அட்டவணையில் உள்ள சிக்கல்களாலும் ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் சிங்கப்பூர் அணி பங்கேற்கவில்லை என்று சம்மேளனம் கூறியது.
இம்முறை ஆசிய விளையாட்டுப் போட்டிகள், 2024ஆம் ஆண்டு நடக்கவுள்ள ஆசிய காற்பந்துக் கூட்டமைப்பு போட்டியின் தகுதிச்சுற்று ஆட்டங்களோடு வருகிறது.
தென்கிழக்காசிய போட்டிகளில் சிங்கப்பூர் அணி தொடர்ந்து ஐந்தாவது முறையாகக் குழு சுற்றுகளிலேயே வெளியேறி ஏமாற்றம் தந்தது. எதிர்காலத்தில் அணி சிறப்பாக செயல்பட வேண்டும் என்ற நோக்கத்தில் கடந்த வெள்ளிக்கிழமை சிங்கப்பூர் காற்பந்து சம்மேளனம் பத்துப் பரிந்துரைகளை வெளியிட்டது.
தென்கிழக்காசிய விளையாட்டுப் போட்டி, 2024ஆம் ஆண்டு நடக்கவுள்ள ஆசிய காற்பந்து கூட்டமைப்பு ஆகிய போட்டிகளில் 22 வயதிற்குட்பட்டோர் காற்பந்து அணி கவனம் செலுத்தும் என்று சம்மேளனம் தெரிவித்தது.
சம்மேளனத்தின் முடிவுக்கு ‘ஸ்போர்ட்ஸ் எஸ்ஜி’ ஆதரவு தந்துள்ளது. சிங்கப்பூர் தேசிய ஒலிம்பிக் மன்றம் எந்த எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை,
இதற்கு முன்னர் சிங்கப்பூர் காற்பந்து அணி 2014 ஆம் ஆண்டு நடந்த ஆசிய விளையாட்டுகளில் பங்கேற்றது; 2018ஆம் ஆண்டு நடந்த போட்டிகளுக்குத் தகுதிபெறவில்லை.
சீனாவின் ஹாங்ஜோ நகரில் செப்டம்பர் 23ஆம் தேதி முதல் அக்டோபர் 8ஆம் தேதி வரை ஆசிய விளையாட்டுப் போட்டிகள் நடக்கவிருக்கின்றன.