பேங்காக்கின் டோன் முவாங் அனைத்துலக விமான நிலையத்தில் சிங்கப்பூர் ஆடவர் ஒருவர் திங்கட்கிழமை கைது செய்யப்பட்டார்.
ஜெர்மனியைச் சேர்ந்த சுற்றுப்பயணியின் மடிக்கணினி, கடப்பிதழ், ஏறக்குறைய 100,000 பாட் ($3,840) ரொக்கம் ஆகியவற்றை அவர் திருடியதாகக் கூறப்படுகிறது.
திருட்டு அல்லது திருடிய பொருள்களைப் பெற்றுக்கொண்டதன் தொடர்பில் சிங்கப்பூர் ஆடவரை திங்கட்கிழமை கைது செய்ததாகவும் அந்த வழக்கை பட்டாயா காவல்துறை விசாரிப்பதாகவும் பேங்காக் விமான நிலைய குடிநுழைவு காவல்துறை ஃபேஸ்புக்கில் பதிவிட்டுள்ளது.
பட்டாயாவில் உள்ள ஹோட்டல் ஒன்று கென்னி டியோ யு சுவான் எனும் ஆடவரைப் பற்றி குடி நுழைவு அதிகாரிகளிடம் புகார் அளித்ததாகத் தாய்லாந்து ஊடகங்கள் கூறின.
ஜெர்மனியைச் சேர்ந்த சுற்றுப்பயணி தங்களிடம் ஒப்படைத்திருந்த பொருள்களை டியோ தனக்குச் சொந்தமானவை என்று ஹோட்டல் ஊழியரிடம் கேட்டுப் பெற்றார். பின்னர் ஹோட்டல் அறையை காலி செய்யாமல் அங்கிருந்து வெளியேறிவிட்டார் என்று அந்தப் புகாரில் குறிப்பிடப்பட்டு உள்ளது.
புகார் கிடைத்த அரை மணி நேரத்திற்குள் குடிநுழைவு அதிகாரிகள் டியோவை விமான நிலையத்தில் கைது செய்தனர்.
திருடப்பட்ட பொருள்களை அவரிடமிருந்து பறிமுதல் செய்து அவற்றின் உரிமையாளரிடம் ஒப்படைத்தனர்.