மருத்துவமனைகளில் தனியார் பராமரிப்பிற்குக் கட்டணம் செலுத்தும் ஒருங்கிணைந்த காப்புறுதித் திட்டத்தைக் (ஐபி) கிட்டத்தட்ட மூன்று மில்லியன் பேர் கொண்டுள்ளனர்.
ஆனாலும், மருத்துவமனைகளில் சேர்க்கப்படும்போது அவர்களில் பாதிக்கும் மேற்பட்டோர் மானியத்துடன் கூடிய மருத்துவப் பராமரிப்பையே நாடுகின்றனர்.
கடந்த 2020-2022 காலகட்டத்தில், ஒருங்கிணைந்த காப்புறுதி கொண்டுள்ள சிங்கப்பூரர்கள், நிரந்தரவாசிகளில் 57 விழுக்காட்டினர் அப்படி மானியத்துடன் கூடிய மருத்துவப் பராமரிப்பை நாடினர்.
மத்திய சேமநிதிக் கழகத்தின் சுகாதாரப் பராமரிப்பு நிதியளிப்பு இணையத்தளம் அண்மையில் வெளியிட்ட தரவுகள் இதனைத் தெரிவிக்கின்றன.
தனியார் மருத்துவமனைகளுக்கான, விலைமிக்க ஒருங்கிணைந்த காப்புறுதி கொண்டுள்ளோரில் பாதிக்கும் குறைவானவர்களே தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றனர்.
மெடிஷீல்டு லைஃப் அடிப்படை சுகாதாரப் பராமரிப்பிற்கும் மேல் கூடுதல் காப்புறுதி வேண்டுவோர் ஒருங்கிணைந்த காப்புறுதித் திட்டத்தை நாடுகின்றனர்.
இதன் தொடர்பில் கருத்துரைத்த சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத்தின் சோ சுவீ ஹாக் பொதுச் சுகாதாரக் கழக இணைப் பேராசிரியர் ஜெரமி லிம், “தனிப்பட்ட மனிதர்கள் காப்புறுதி வாங்கும்போதும் அதனைப் பயன்படுத்தும்போதும் வெவ்வேறு மனநிலையில் உள்ளனர். காப்புறுதி வாங்கும்போது, கூடுதல் பாதுகாப்பு அளிக்கும் திட்டங்களே பெரும்பாலோரின் தெரிவாக இருக்கிறது.
“ஆயினும், அவற்றைப் பயன்படுத்தும்போது, இணைக் கட்டணங்கள் செலுத்த வேண்டியிருப்பதாலும் இறுதி மருத்துவச் செலவுப் பட்டியல் எப்படி இருக்குமோ என்ற எண்ணத்தாலும் அவர்கள் எச்சரிக்கையுடன் செயல்படுகின்றனர்,” என்றார்.
ஒருங்கிணைந்த காப்புறுதித் திட்டம் கொண்டுள்ளோரில் கிட்டத்தட்ட 70 விழுக்காட்டினருக்கு, அதற்கான சந்தா அவர்களின் மெடிசேவ் கணக்கிலிருந்து செலுத்தப்படுகிறது. அப்படி மெடிசேவ் கணக்கிலிருந்து பயன்படுத்தும் தொகைக்கும் வயது அடிப்படையிலான வரம்பு உண்டு.
ஒருங்கிணைந்த காப்புறுதிக்கான சந்தா, அவ்வரம்பைத் தாண்டும் பட்சத்தில், கூடுதல் தொகையானது ரொக்கமாகச் செலுத்தப்பட வேண்டும்.
தனியார் மருத்துவமனை ஒருங்கிணைந்த காப்புறுதித் திட்டங்களுக்கான வருடாந்திர இடைநிலைக் கட்டணத்தைப் பார்க்கையில், ஒருவர் 60களின் பிற்பகுதியில் இருக்கும்போது சந்தாவில் பாதிக்கும் மேல் ரொக்கமாகச் செலுத்த வேண்டியிருக்கும்.
அவர்கள் 80களில் இருக்கும்போது, சந்தாவிற்கு ரொக்கமாக மட்டும் 5,000 வெள்ளிக்குமேல் செலுத்த வேண்டியிருக்கலாம்.
இந்நிலையில், “ஒருங்கிணைந்த காப்புறுதித் திட்டத்தை வாங்குமுன், அது தமக்கான தேவையை ஈடுகட்டுமா, நீண்டகாலத்திற்குக் கட்டுப்படியாகுமா என்று ஒருவர் சிந்தித்துச் செயல்படுவது அவசியம்,” என்று மத்திய சேமநிதிக் கழகம் அறிவுறுத்தியுள்ளது.