எஃப்1 சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் கார் பந்தயம் 2023 சிங்கப்பூரில் செப்டம்பரில் நடக்க இருக்கிறது. இதற்கான ஆயத்தப்பணிகள் திட்டமிடப்பட்டதைப் போல் தொடரும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இந்தக் கார்ப்பந்தய நிகழ்ச்சிக்குப் பின்னணியாக இருக்கக்கூடிய பிரபலங்கள் சம்பந்தப்பட்ட புலன்விசாரணை நடந்துவரும் போதிலும் ஆயத்தப்பணிகள் தொடரும்.
சம்பந்தப்பட்ட அனைத்து தரப்புகளோடும் சேர்ந்து செயல்பட்டு இந்த நிகழ்ச்சியை வெற்றிகரமான முறையில் நடத்த தொடர்ந்து கடப்பாடு கொண்டுள்ளதாக சிங்கப்பூர் சுற்றுலாக் கழகத்தின் விளையாட்டு, உடலுறுதிப் பிரிவுக்கான நிர்வாக இயக்குநர் திருவாட்டி ஓங் லிங் லீ கூறினார்.
மெரினா பே ஸ்திரீட் சுற்றுப்பாதையில் செப்டம்பர் 15 முதல் 17 வரை எஃப்1 கார் பந்தயம் நடக்க இருக்கிறது. அதுபற்றி கேட்டபோது திருவாட்டி ஓங் இந்த விவரங்களைத் தெரிவித்தார்.
போக்குவரத்து அமைச்சர் எஸ் ஈஸ்வரன், தொழிலதிபர் ஓங் பெங் செங் இருவரையும் லஞ்ச ஊழல் புலனாய்வுப் பிரிவு விசாரித்து வருவதாக ஜூலை மாதத் தொடக்கத்தில் தகவல்கள் வெளியாயின.
அதையடுத்து எஃப்1 கார் பந்தயத்தின் எதிர்காலம் பற்றி கேள்வி எழுந்தது. எஃப்1 கார் பந்தய ஏற்பாட்டில் சிங்கப்பூரும் ஓர் அங்கமாக ஆகி இருக்கிறது. இதைச் சாதித்ததில் அமைச்சர் ஈஸ்வரனும் திரு ஓங்கும் முக்கியமானவர்கள் என்பது தெரியவந்துள்ளது. சிங்கப்பூர் கார்ப் பந்தய உரிமை திரு ஓங் வசம் உள்ளது.
திரு ஈஸ்வரனும் திரு ஓங்கும் ஜூலை 11 ஆம் தேதி கைதானதாகவும் தான் கண்டறிந்த ஒரு விவகாரம் பற்றிய புலன்விசாரணையில் அவர்கள் இருவரும் உதவி வருவதாகவும் லஞ்ச ஊழல் புலனாய்வுப் பிரிவு சென்ற வெள்ளிக்கிழமை தெரிவித்தது.
எஃப்1 கார் பந்தயத்திற்கான திட்டமும் ஆயத்தப்பணிகளும் தொடர்வதாக பந்தய விளம்பர நிறுவனமான சிங்கப்பூர் ஜிபி சென்ற வாரம் தெரிவித்தது.
புலன்விசாரணை நடப்பதால் மேல் விவரங்களைத் தெரிவிக்கும் நிலையில் தான் இல்லை என்றும் சிங்கப்பூர் ஜிபி கூறியது.