பாடாங்கில் ஆயிரக்கணக்கான மக்கள் குழுமி இருக்க, நாட்டுப்பற்று உணர்ச்சி பெருக்கெடுக்க, சூரியன் மறையும் மாலை வேளையில் தேசிய தின அணிவகுப்பு புதன்கிழமை கோலாகலமாக நடந்தது.
சிங்கப்பூர் ஆகாயப் படையின் விமானம் ஆகாயத்தில் சீறிப் பறந்ததும் ஒரு பதின்ம வயதுப் பையன் முழுமைத் தற்காப்புப் பற்றி தன்னுடைய குடும்பத்திற்குப் போதிக்க முயன்றதும் தேசப்பற்று உணர்வை மேலும் ஊட்டியது.
அந்தச் சிறுவன் நாள்தோறும் வீடுகளில் பயன்படுத்தக்கூடிய ஆறு பொருள்களைக் கொண்டு முழுமைத் தற்காப்பை விளக்கினார்.
சிங்கே பாணி மிதவைகள் அணிவகுப்பும் அவை பெரும் பெரும் தோற்றத்தில் திரைகளில் மின்னியதும் பார்வையாளர்களைப் பெரிதும் ஈர்த்தது.
குடை, பாட்டியின் நினைவுப் பொருள்களைக் கொண்ட ஒரு பெட்டி, உடற்பயிற்சி சாதனம், உணவு மூடி, முதலுதவி சாதனம், பென்சில் வைக்கும் டப்பா ஆகிய அந்த ஆறு பொருள்களும் முழுமைத் தற்காப்பின் ஆறு தூண்களை விளக்குவதற்காகப் பயன்படுத்தப்பட்டன.
எடுத்துக்காட்டாக, ஒரு குடையை பலரும் பகிர்ந்துகொள்ளும்போது மழையில் நனையாமல் குடை நம்மை காக்கிறது. அதேபோல, ஒருவர் மற்றொருவர்மீது காட்டும் கருணை சிங்கப்பூரின் சமூகப் பிணைப்பைப் பலப்படுத்துகிறது.
முழுமைத் தற்காப்பின் மற்றொரு தூணான மனோவியல் தற்காப்பை, பலதரப்பட்ட நினைவலைகளை தன்னகத்தே வைத்திருக்கும் ஒரு பிஸ்கெட் டப்பா எடுத்துக்காட்டி விளக்கியது.
அந்த நினைவுகள் சிங்கப்பூரர்களின் பொதுவான அனுபவங்களைப் பிரதிபலிப்பவையாக இருந்தன.
பார்வையாளர்களின் ஆரவாரம் விண்ணைப் பிளந்தது. மிதவையின் உச்சியில் இடம்பெற்றிருந்த பிரபலமான சிங்கே கருணை சிங்கம் பார்வையாளர்களின் மனதில் கருணை பொங்க வைத்தது.
பொருளியல் தற்காப்பைக் குறிக்கும் வகையில் பளுதூக்கிச் சாதனம்; மின்னிலக்கத் தற்காப்பைப் பிரதிநிதிக்கும் வகையில் உணவை மூடி வைக்கும் சாதனம்; குடிமைத் தற்காப்பைப் பிரதிநிதிக்கும் வகையில் இடம்பெற்ற முதலுதவி சாதனம், ராணுவத் தற்காப்பை எடுத்துக்காட்டிய பென்சில் டப்பா ஆகியவை முழுமைத் தற்காப்பை முழுமையாக மக்களுக்கு எடுத்துக்காட்டின.
“சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படையைச் சேர்ந்தவர்களுக்கு எப்போதுமே நம்முடைய ஆதரவு உண்டு. அதேவேளையில், குடிமைத் தற்காப்பு என்பது அவசரகாலங்களில் நம்மை நாமே பாதுகாத்துக்கொள்ள ஒவ்வொருவரும் ஆயத்தமாக இருக்கவேண்டும்” என்பதை வலியுறுத்திய குரல் பாடாங்கில் ஓங்கி ஒலித்தது.
இந்த ஆண்டு அணிவகுப்பில் முதன்முதலாக 650 பேர் பங்கெடுத்துக்கொண்ட பெரிய அளவிலான முழுமைத் தற்காப்பு அணிவகுப்பு இடம்பெற்றது.
மிதவைகள் ஒருபுறம் இருக்க, செயின்ட் ஆண்ட்ருஸ் ரோடு வழியாக ராணுவ வாகனங்கள் அணிவகுத்துச் சென்றன.
முதல் அணிக்கு லியோபேர்ட் 2எஸ்ஜி பிரதான போர் கவச வாகனம் தலைமை ஏற்றது. அந்த அணி முழுவதும் சிங்கப்பூர் ஆயுதப் படைகளைச் சேந்த வாகனங்கள் இடம்பெற்றிருந்தன.
அதேவேளையில், பல்வேறு மாணவர் சீருடை அமைப்புகளையும் அன்றாட குடிமக்களையும் பிரதிநிதிக்கும் கிட்டத்தட்ட 100 பேர் முழுமைத் தற்காப்புச் சின்னத்துடன் கூடிய கொடியைப் பறக்கவிட்டபடி ஏந்தி வந்தனர்.
முழுமைத் தற்காப்பிற்கு கடந்த 58 ஆண்டுகளாக தொண்டாற்றி இருக்கும் அனைவருக்கும் அந்த அணிவகுப்பில் பங்கேற்ற அனைவரும் வீரவணக்கம் செலுத்தி நன்றி தெரிவித்தனர்.
பிறகு வாணவேடிக்கை ஆகாயத்தை வண்ண நிறங்களில் ஜொலிக்க வைத்தது.
அந்த மகிழ்ச்சி ஆரவாரத்திற்கு இடையே மற்றொரு காணொளி எல்லாருடைய மனங்களிலும் இடம்பிடிப்பதாக இருந்தது.
வாழ்க்கையின் அனைத்து தரப்புகளையும் சேர்ந்த சிங்கப்பூரர்கள் சமூக உணர்வைப் பலப்படுத்தும் வகையில் ஆற்றும் பங்கை அந்தக் காணொளி எடுத்துக்காட்டியது. அது நாட்டைத் தற்காப்பது என்பது முழுமையான, ஒட்டுமொத்தமான ஒரு முயற்சி என்பதை நமக்கு நினைவூட்டியது.