ஆழ்சுரங்க வடிகால் திட்டத்தின் இரண்டாம் கட்ட சுரங்கம் தோண்டும் பணிகளை நிறைவு செய்துள்ளதாக பொதுப் பயனீட்டுக் கழகம் திங்கட்கிழமை கூறியது.
கொவிட்-19 கொள்ளைநோய் காரணமாக திட்டமிட்டதைக் காட்டிலும் சிறிது தாமதமாக பணிகள் முடிக்கப்பட்டபோதிலும் 98 கிலோமீட்டர் ஆழ்சுரங்க வடிகால் கட்டமைப்பு தயாராகும் நிலையை சிங்கப்பூர் கிட்டத்தட்ட எட்டியுள்ளது.
ஏற்கெனவே திட்டமிட்டபடி, 2025ஆம் ஆண்டில் திட்டம் நிறைவேற்றப்பட வேண்டியது. கொள்ளைநோய் ஏற்படுத்திய தாமதம் காரணமாக இது ஓராண்டு தள்ளிப்போகும் நிலை ஏற்பட்டுள்ளது.
வீடுகளிலும் தொழிற்கூடங்களிலும் பயன்படுத்தி வெளியேற்றப்படும் நீர், ஆழ்சுரங்கம் வழியாக இணைந்து, இனி அமையவிருக்கும் துவாஸ் தண்ணீர் மீட்பு ஆலையின் சுத்திகரிப்புக்குச் செல்லும். பின்னர் அது ‘நியூவாட்டர்’ என மாற்றம் கண்டு மீண்டும் பயன்பாட்டுக்கு வரும் வகையில் திட்டம் வரையப்பட்டு உள்ளது.
மேற்கு சிங்கப்பூரின் பாதியளவுக்கும் தெங்கா நகரம் மற்றும் ஜூரோங் லேக் வட்டாரம் உருவான பின்னர் அந்தப் பகுதிகளுக்கும் இது தொடக்கத்தில் சேவையாற்றும்.
தண்ணீரை தடையின்றி சுத்திகரித்து, மறுபயனீடு செய்து, சிங்கப்பூரின் நீர்வளத்தை விரிவுபடுத்தும் நோக்கம் கொண்டது இத்திட்டம்.
இரண்டாம் கட்ட சுரங்கம் தோண்டும் பணி நிறைவு நிகழ்வில் நீடித்த நிலைத்தன்மை, சுற்றுப்புற அமைச்சர் கிரேஸ் ஃபூ திங்கட்கிழமை கலந்துகொண்டார். அப்போது பேசிய அவர், இரண்டாம் கட்டப் பணியில் 5,000க்கும் மேற்பட்ட ஊழியர்கள் ஈடுபடுத்தப்பட்டதாகவும் திட்டத்திலேயே ஆக அதிகமான ஊழியர்கள் இதற்காகப் பயன்படுத்தப்பட்டதாகவும் தெரிவித்தார்.
“கடந்த 2019ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட பணிகள் நான்கு ஆண்டு காலம் நீடித்து 40 மில்லியன் மனித உழைப்பு நேரங்கள் பயன்படுத்தப்பட்ட பின்னர் இன்று அதன் நிறைவைக் கொண்டாடுகிறோம்,” என்றார் அவர்.