பாலர்பள்ளி மாணவியை வலுக்கட்டாயமாகப் படுக்கவைத்து அவர் வாயில் நீரை ஊற்றியதாக சந்தேகிக்கப்படும் முன்னாள் கிண்டர்லேண்ட் பாலர்பள்ளி ஆசிரியைமீது குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.
லின் மின் என்ற அந்த 33 வயது மாது புதன்கிழமையன்று ஒரு மாவட்ட நீதிமன்றத்தில் காணொளி வாயிலாக முன்னிலையானார். அவர் ஒரு பிள்ளையைத் துன்புறுத்தியதாக நம்பப்படுகிறது.
இவ்வாண்டு ஜூன் மாதம் 30ஆம் தேதியன்று பிற்பகல் நான்கு மணிக்கு சிறிது நேரத்துக்கு முன்பு அவர் அவ்வாறு செய்ததாகச் சந்தேகிக்கப்படுகிறது. அப்படிப்பட்ட செயல், சிறார், இளையர் சட்டத்தின்கீழ் குற்றமாகும்.
பாதிக்கப்பட்ட பிள்ளையின் அடையாளம், சம்பவம் நிகழ்ந்ததாகக் கூறப்படும் இடம் ஆகிய விவரங்களை வெளியிட சட்டப்படி அனுமதி இல்லை.
இந்நிலையில், சுவா சூ காங்கில் உள்ள கிண்டர்லேண்ட பாலர்பள்ளியில் பணியாற்றும் 48 வயது ஆசிரியையும் கைது செய்யப்பட்டுள்ளார். 14 வயதுக்குக் கீழ் உள்ள ஒருவருக்கு வேண்டுமென்றே காயம் விளைவித்ததாக சந்தேகிக்கப்படுகிறது.
ஓர் இளம் பையனை ஆசிரியை அடித்ததாக நம்பப்படுகிறது. அச்சம்பவம் பதிவானதாகக் கூறப்படும் காணொளி இணையத்தில் பலரால் பகிரப்பட்டது.
அந்த 19 விநாடி காணொளி சுவா சூ காங் அவென்யூ மூன்று சன்ஷைன் பிளேசில் இருக்கும் கிண்டர்லேண்ட் பாலர்பள்ளியில் பதிவானதாகக் கூறப்படுகிறது. இதன் தொடர்பில் புகார் கொடுக்கப்பட்டதையடுத்து செவ்வாய்க்கிழமை ஆசிரியை கைது செய்யப்பட்டார்.
பிள்ளை துன்புறுத்தல் விவகாரத்தின் தொடர்பில் கிண்டர்லேண்ட் பாலர்பள்ளியின் கிளை ஒன்றின் தலைவரும் அக்கிளையை நடத்துபவர்கள்மீதும் விசாரணை நடத்தப்பட்டு வருவதாக பாலர்கல்வி மேம்பாட்டு அமைப்பு தெரிவித்தது. சம்பந்தப்பட்ட கிண்டர்லேண்ட் கிளைக்கு இந்த விவகாரத்தில் இருக்கும் பங்கை ஆராய விசாரணை மேற்கொள்ளப்படுகிறது.
இந்நிலையில், கிண்டர்லேண்ட் பாலர்பள்ளி முதல்வரைப் பணிநீக்கம் செய்யுமாறும் பாலர்பள்ளி துறையில் அவர் பணிபுரிய தடை விதிக்குமாறும் பெற்றோர் சிலர் வலியுறுத்தியுள்ளனர்.