தமிழர் மரபுடைமைகளின் சான்றுகளைப் பேணிப் பாதுகாத்து வருகிறது தமிழகத்தில் இயங்கிவரும் ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம்.
தெற்காசிய அளவில், ஆவணக் காப்பகம், அருங்காட்சியகம், ஆராய்ச்சி மையங்கள் ஆகியவற்றை உள்ளடக்கிய ஒரு தனித்துவமான நூலகமாக இது செயல்பட்டு வருகிறது.
1994ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்நூலகம், 500,000 ஆவணச் சேகரிப்புகளைக் கொண்டுள்ளது.
சென்னையில் உள்ள தரமணியில் தற்போது இயங்கிவரும் இந்த நூலகத்தின் மெய்நிகர் சுற்றுலா சிங்கப்பூர் தேசிய நூலக வாரியத்தின் ஏற்பாட்டில் அண்மையில் நடைபெற்றது.
இந்நிகழ்வு ஆகஸ்ட் 26 சனிக்கிழமை ‘சூம்’ தளத்தில் நடைபெற்றது.
தமிழகத்தின் கோட்டையூரில் வசித்த திரு ரோஜா முத்தையா, புத்தகங்கள் மீது தீராத பற்றுடையவர். தமது வாழ்நாளின் பெரும் பகுதியை புத்தகங்களைச் சேகரிப்பதில் அதீத முனைப்பு காட்டினார்.
யாழ்ப்பாணத்திலுள்ள நூலகம் எரிந்தபோது அதேபோல் ஒரு நல்ல நூலகத்தை உருவாக்க வேண்டும் என்று உறுதிகொண்டார்.
வீடு முழுவதும் ஏறத்தாழ 50,000 நூல்களையும் 50,000 பிற ஆவணங்களையும் சேகரித்து வைத்திருந்தார்.
தன்னுடைய இறுதிக் காலத்தில் இச்சேகரிப்பை அரசுடைமையாக்க இவர் மேற்கொண்ட பல்வேறு முயற்சிகள் தோல்வியில் முடிந்தன.
திரு ரோஜா முத்தையா 1992ஆம் ஆண்டு காலமானார்.
அதன் பின்னர் 1994ஆம் ஆண்டு சிகாகோ பல்கலைக்கழகத்தின் உதவியுடன் இந்த நூலகம் சென்னையில் முகப்பேர் பகுதியில் வாடகைக் கட்டடத்தில் தொடங்கப்பட்டது.
புத்தகங்களின் தகவல்களை பத்திரப்படுத்த நுண்படம் எடுக்கும் தொழில்நுட்ப முறை, புத்தகங்களின் அட்டவணை தயாரித்தல் போன்ற பல்வேறு பணிகளை இந்த நூலகம் மேற்கொண்டது.
ஆரம்பத்தில் ஆய்வாளர்களும் எழுத்தாளர்களும் மட்டுமே இந்நூலகத்தைப் பயன்படுத்தி வந்தனர்.
புத்தகங்கள் சார்ந்த அனைத்து செயல்பாடுகளையும் மின்னிலக்கமயமாக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறோம் என்றும் விரைவில் இந்த நூலகத்தை மின்னிலக்க நூலகமாக மாற்றும் முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறோம் என்றும் கூறினார் காப்பக நிபுணரான திரு சுந்தர்.
இந்நிகழ்வில் பங்கேற்ற சிங்கப்பூர்த் தமிழ்ப் பண்பாட்டு மையத்தின் தலைவர் திரு அருண் மகிழ்நன், நூலகச் செயல்பாடுகளில் முன்னிலை வகித்து வரும் இந்நூலகத்தின் பணிகளைப் பாராட்டியதோடு, சிங்கப்பூர்-தமிழக நூலகங்களுக்கு இடையிலான உறவு வலுப்படவேண்டும் என்று விருப்பப்பட்டார்.
நூலகத்தின் அனைத்து முக்கிய அம்சங்களையும் ‘சூம்’ தளத்தில் மெய்நிகர் சுற்றுலாவாக தமது குழுவுடன் இணைந்து சுற்றிக்காட்டினார் திரு சுந்தர்.
இந்நிகழ்வினை உள்ளூர்க் கலைஞர் திரு வடிவழகன் வழிநடத்தினார்.
செய்தி: மோனலிசா