குறுக்குத் தீவு ரயில் பாதையின் பொங்கோல் நீட்டிப்புத் திட்டத்தின் கட்டுமானம் அதிகாரபூர்வமாகத் தொடங்கியுள்ளது. சிங்கப்பூரின் வடகிழக்கு, கிழக்குப் பகுதிகளுக்கு இடையே அன்றாடம் 70,000க்கும் அதிகமான பயணங்களின் தூரம் குறையும்.
2032க்குள் பயணிகள் சேவை தொடங்கும் என எதிர்பார்க்கப்படும் வேளையில், சிங்கப்பூரின் எட்டாவது ரயில் பாதையான குறுக்குத் தீவு பாதைக்கு 7.3 கி.மீ. நீட்டிப்பு நான்கு நிலையங்களை உள்ளடக்கும். பொங்கோல், ரிவியேரா, இலாயஸ், பாசிர் ரிஸ் ஆகியவை அவை.
பொங்கோல் நிலையம், வடக்கு-கிழக்கு ரயில் பாதையுடன் இணைக்கப்படும். ரிவியேரா நிலையம், பொங்கோல் எல்ஆர்டி பாதையுடன் இணைக்கப்படும். பாசிர் ரிஸ் நிலையம், கிழக்கு-மேற்கு ரயில் பாதையுடன் இணைக்கப்படும்.
ரிவியேரா எம்ஆர்டி நிலையம் அமையவிருக்கும் இடத்தில் செவ்வாய்க்கிழமை நடந்த நில அகழ்வு விழாவில் கலந்துகொண்டு பேசிய இடைக்காலப் போக்குவரத்து அமைச்சர் சீ ஹொங் டாட், நீட்டிக்கப்படும் பாதை திறக்கப்பட்டவுடன் குடியிருப்பாளர்கள் பொங்கோலில் இருந்து பாசிர் ரிசுக்கு 15 நிமிடங்களில் சென்றுவிடலாம் என்று கூறினார். தற்போது அவ்விரு இடங்களுக்கும் இடையே பேருந்துப் பயண நேரம் 40 நிமிடங்களாக உள்ளது.
ரயில் பாதை நீட்டிக்கப்படுவதன் மூலம் 40,000க்கும் அதிகமான குடும்பங்கள் பலனடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. பொங்கோல் மின்னிலக்க வட்டாரம், சாங்கி ஏவியேஷன் பார்க் போன்ற இடங்களுக்கு ரயில் வசதிகளையும் இது மேம்படுத்தும்.
குறுக்குத் தீவு ரயில் பாதையின் பொங்கோல் நீட்டிப்பு, அதே பாதையில் உள்ள பாசிர் ரிஸ் நிலையத்துடன் இணைக்கப்படும்.
குறுக்குத் தீவு பாதையின் முதற்கட்ட கட்டுமானப் பணி ஜனவரியில் தொடங்கியது. ஏவியேஷன் பார்க் முதல் பிரைட் ஹில் வரை 12 நிலையங்கள் அப்பாதையில் அமைகின்றன.
அப்பாதையின் இரண்டாம் கட்டத்துக்கான ஒப்பந்தப்புள்ளிகள் கட்டங்கட்டமாகக் கோரப்படுகிறது. டர்ஃப் சிட்டி முதல் ஜூரோங் லேக் வட்டாரம் வரை ஆறு நிலையங்கள் அதில் இடம்பெறுகின்றன. குறுக்குத் தீவு பாதையின் மூன்றாம் கட்டத்துக்கான பொறியியல் ஆய்வு நடைபெற்று வருகிறது.