முதல்முறை வீடு வாங்கும் குடும்பங்களிடையே சுவா சூ காங், தெங்கா வட்டாரங்களில் அமைந்துள்ள பெரிய வீடுகளுக்கு அதிக வரவேற்பு இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அக்டோபர் மாதம் விற்பனைக்கு விடப்பட்ட ‘பிடிஓ’ எனப்படும் தேவைக்கேற்ப கட்டப்படும் வீடுகளில் இந்தப் போக்கு கண்டறியப்பட்டது.
ஒட்டுமொத்தத்தில், அக்டோபரில் ‘பிடிஓ’ வீடுகளுக்கு விண்ணப்பம் செய்தோர் எண்ணிக்கை அதற்கு முந்தைய விற்பனைகளைவிட, குறிப்பிடத்தக்க அளவு சரிந்தது.
சுவா சூ காங்கில் உள்ள ரயில் கிரீன் I, II திட்டங்களின்கீழ் 544 ஐந்தறை வீடுகள் விற்பனைக்கு விடப்பட்டுள்ளன. தெங்காவில் உள்ள பிலேன்டேஷன் எட்ஜ் I, II திட்டங்களின்கீழ் 313 ஐந்தறை வீடுகள் விற்பனைக்கு விடப்பட்டுள்ளன.
அக்டோபர் 10ஆம் தேதி மாலை 5 மணி நிலவரப்படி, அந்த வீடுகளுக்கு தலா 1.6 விண்ணப்பங்கள் பெறப்பட்டதாக வீடமைப்பு வளர்ச்சிக் கழகம் (வீவக) கூறியது.
இந்த வீடுகளுக்கான காத்திருப்புக் காலம் மூன்று ஆண்டுகள் நான்கு மாதங்கள்.
சுவா சூ காங், தெங்கா போன்ற முதிர்ச்சியடையாத பேட்டைகளில் கிட்டத்தட்ட 95 விழுக்காட்டு நான்கறை மற்றும் பெரிய வீடுகள், முதல்முறை விண்ணப்பிப்போருக்காக ஒதுக்கப்பட்டுள்ளன.
குவீன்ஸ்டவுன், காலாங்/வாம்போ போன்ற முதிர்ச்சியடைந்த பேட்டைகளில் வீடுகளுக்கான தேவை குறைந்துள்ளது. எனவே இந்தப் பகுதிகளில் முதல்முறை வீட்டுக்கு விண்ணப்பம் செய்வோர் அனைவருக்கும் வீடு கிடைப்பதற்கான சாத்தியம் அதிகம்.
குவீன்ஸ்டவுனில் உள்ள தங்ளின் ஹால்ட் கஸ்கேடியா திட்டத்தின்கீழ், 155 மூவறை வீடுகளும் 818 நான்கறை வீடுகளும் விற்பனைக்கு விடப்பட்டுள்ளன. இவற்றுக்கு விண்ணப்பித்த முதல்முறை வீடு வாங்குவோரின் விகிதம் 1க்குக்கீழ் பதிவானது.
காலாங்/வாம்போ வட்டாரத்தில் ராஜா ரெசிடென்சஸ், தெந்திராம் வான்டேஜ், வெராண்டா அட் காலாங் என மூன்று திட்டங்களின்கீழ், மொத்தம் 2,452 நான்கறை வீடுகள் விற்பனைக்கு விடப்பட்டுள்ளன. இவற்றுக்கு விண்ணப்பித்த முதல்முறை வீடுவாங்குவோரின் விகிதம் 1ஆகப் பதிவானது. ஆனால் இந்த வட்டாரத்தின் 198 மூன்றறை வீடுகளுக்கு விண்ணப்பித்த முதல்முறை வீடுவாங்குவோரின் விகிதம் 1க்குக்கீழ் பதிவானது.
ஒட்டுமொத்தமாக, சுவா சூ காங், காலாங்/வாம்போ, குவீன்ஸ்டவுன், தெங்கா ஆகியவற்றில் எட்டு ‘பிடிஓ’ திட்டங்களின்கீழ் 6,800 வீடுகள் விற்பனைக்கு விடப்பட்டுள்ளன. இவற்றுக்கு செவ்வாய்க்கிழமை இரவு 11.59 மணிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.