இதயத்துடிப்பு திடீரென நின்றதால் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்தவர்களைக் காப்பாற்றிய 34 பேர் கௌரவிக்கப்பட்டனர். சமூக முதலுதவியாளர்கள், தீயணைப்பாளர்கள், மருத்துவ உதவியாளர்கள் உள்ளிட்டோர் அவர்களில் அடங்குவர்.
சனிக்கிழமை நடைபெற்ற ‘புரோஜெக்ட் ஹார்ட்’ நிகழ்வில் பேசிய உதவிப் பேராசிரியர் சிங் சி கியோங், இதய இயக்க மீட்பு சிகிச்சை (சிபிஆர்) அளிப்பதாலும் ஏஇடி சாதனத்தை உடனடியாக பயன்படுத்துவதாலும் இதயத்துடிப்பு இல்லாத ஒருவர் உயிர்பிழைக்கும் சாத்தியம் 50 விழுக்காடு வரை கூடலாம் என்று தெரிவித்தார்.
“இதயம் தொடர்பான பிரச்சினை உடையோருக்கு உடனடியாக உதவுவதன் அவசியத்தை இது உணர்த்துகிறது. துணிச்சலாக செயல்படாத காரணத்தால் உயிரிழப்பு ஏற்படும் நிலையை நாம் தவிர்க்க வேண்டும்,” என்று அவர் கேட்டுக்கொண்டார்.
ஒவ்வோர் ஆண்டும், இதயத்துடிப்பு நின்றதால் வெளியிடங்களில் மயங்கி விழுவோரில் 22 விழுக்காட்டினர் மட்டுமே உயிர்பிழைக்கின்றனர். இந்த நிலை மேம்பட இன்னும் அதிகமான முயற்சிகள் எடுக்கப்பட வேண்டும் என்று பேராசிரியர் சிங் வலியுறுத்தினார்.