சிங்கப்பூரின் ஆகப் பெரிய சட்டவிரோதப் பண விவகாரத்தில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள ஒரே மாது, செந்தோசா கோவ் பங்களா வீட்டில் தன் காதலனுடன் வசித்ததாகவும் அவரின் 15 வயது மகள் பீச் ரோட்டில் இல்லப் பணிப்பெண்ணுடன் வசித்ததாகவும் அரசுத்தரப்பு வழக்கறிஞர் குறிப்பிட்டுள்ளார்.
மாதுடன் வசித்துவந்த அந்தக் காதலன், $2.8 பில்லியன் சட்டவிரோதப் பண விவகாரத்தில் குற்றஞ்சாட்டப்பட்ட பத்துப் பேரில் ஒருவராவார்.
சீன நாட்டவரான 44 வயது லின் பவ்யிங்கின் பிணை மறுஆய்வின்போது மாது தன் மகளுடன் சிங்கப்பூரில் இருந்ததாகக் கூறியிருந்தார். இந்நிலையில், மாது நீதிமன்றத்தில் உண்மையை உரைக்கவில்லை என அரசாங்கத் தரப்பு வழக்கறிஞர் நிக்கலஸ் டான் சுட்டினார்.
“உண்மையில், அந்த மகள் சிங்கப்பூரில் வசித்து வந்தாலும் குற்றஞ்சாட்டப்பட்டவருடன் தங்கி இருக்கவில்லை. இருவரும் வெவ்வேறு முகவரிகளில் வசித்தனர்,” என்றார் அவர்.
தன் மகளைக் காரணம் காட்டி சிங்கப்பூரிலேயே தான் வேரூன்றிவிட்டதாகக் கூறிய லின், நிலையை மிகைப்படுத்திக் கூறியுள்ளதாக அரசாங்க வழக்கறிஞர் வாதிட்டார்.
லின் தடுப்புக் காவலில் இருக்கும் நிலையில், அவரின் மகளுக்குப் போதுமான பராமரிப்பு வழங்கப்பட்டு வருவதாக அவர் குறிப்பிட்டார்.
பிணையில் விடுவிப்பது தொடர்பில் வாதிட்ட லின்னின் வழக்கறிஞர் திரு சியூ, ஜூன் 2022ஆம் ஆண்டில் காவலர்கள் லின்னை நேர்கண்டதாகவும் அதன் பின்னர் சிங்கப்பூரை விட்டு லின் இருமுறை சென்றுவிட்டு மீண்டும் திரும்பினார் எனவும் கூறினார்.
தப்பிக்க நினைப்பவர் செய்யக்கூடிய செயல் இது அல்ல என்றும் அவர் தெரிவித்தார்.
துருக்கி, கம்போடியா, தன்னுடன் எந்த ஒட்டுறவும் இல்லாத டாமினிகா நாடு ஆகிய நாடுகளுக்கான கடப்பிதழ்கள் லின்னிடம் இருந்ததாக அரசாங்கத்தரப்பு வழக்கறிஞர் வாதிட்டார்.