லோயாங்கில் சாலையை சரியாகக் கவனிக்காமல் வலது புறம் திரும்பும்போது கார் ஓட்டுநர் ஒருவர் மோட்டார்சைக்கிளோட்டிமீது மோதி அவருக்கு மோசமான காயம் விளைவித்ததாக நம்பப்படுகிறது.
சந்தேக நபரான 41 வயது லோ பூன் சியோங்மீது சாலையில் மற்றவர்களின் பாதுகாப்பைக் கருத்தில்கொள்ளாது மோசமான காயம் ஏற்படுத்தியதாக புதன்கிழமையன்று குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது. அவர் உட்பட இதுபோன்ற குற்றங்களைப் புரிந்ததாகச் சந்தேகிக்கப்படும் ஐந்து ஓட்டுநர்கள்மீது குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன.
சந்தேக நபர்கள் 25லிருந்து 66 வயதுக்கு உட்பட்டவர்கள்.
அவர்களில் ஒருவரான 66 வயது முகம்மது நசிர் ஹரோன், புக்கிட் பாஞ்சாங்கில் கவனமின்றி காரை ஓட்டியதால் ஒரு சைக்கிளோட்டிமீது மோதியதாக நம்பப்படுகிறது. ஸீப்ரா சாலைக் கடப்பைப் பயன்படுத்திக்கொண்டிருந்த சைக்கிளோட்டிக்குக் காயம் ஏற்பட்டது.
மற்றொருவரான 25 வயது சியாஃபீக் ஹமாடி ஷாரின் ஷைஃபுதீன் என்பவர், ஸியோன் சாலையில் ஓர் ஆடவரையும் ஒரு மாதையும் மோதியதாகக் கூறப்படுகிறது.
குற்றச்சாட்டு சுமத்தப்பட்ட நான்காவது சந்தேக நபரான 28 வயது சப்னானி அக்ஷை அர்வின் லோயாங்கில் கவனமின்றி தனது மோட்டார்சைக்கிளை ஓட்டிச் சென்றதாகக் கருதப்படுகிறது. அதனால் வேறொரு மோட்டார்சைக்கிளுடன் மோதி அதன் ஓட்டுநர் காயமுற்றதாக நம்பப்படுகிறது.
ஐந்தாவது சந்தேக நபர் 65 வயது லாரி ஓட்டுநர். சினோக்கோ சாலையில் வலது புறம் திரும்பும்போது அவர் ஒரு மோட்டார்சைக்கிள்மீது மோதியதாகக் கூறப்படுகிறது.