சிங்கப்பூரில் ஆட்குறைப்பு, வேலையின்மையால் பாதிக்கப்பட்ட சிங்கப்பூர்வாசிகளின் எண்ணிக்கை 2023 மூன்றாவது காலாண்டில் அதிகரித்துள்ளது.
இருந்தாலும்கூட ஊழியர் சந்தையில் வேலையின்மை விகிதம் தொடர்ந்து குறைவாகவே இருந்தது.
பொருளியல் நிலவரங்கள் சரியில்லை என்றாலும் ஊழியர் சந்தை தொடர்ந்து விரிவடைந்தது.
மனிதவள அமைச்சு வியாழக்கிழமை ஓர் எச்சரிக்கை விடுத்தது.
அதாவது வேலையின்மை விகிதம் மெதுவாகக் கூடி வருகிறது. அது தொடர்ந்து மேலும் அதிகமாகக்கூடும் என்று அமைச்சு தெரிவித்தது.
அமைச்சு வியாழக்கிழமை மூன்றாவது காலாண்டுக்கான முன்னோட்டப் புள்ளி விவரங்களை வெளியிட்டது.
இந்த ஆண்டின் இரண்டாவது காலாண்டில் 3,200 ஆக இருந்த ஆட்குறைப்பு எண்ணிக்கை மூன்றாவது காலாண்டில் 900 கூடி 4,100 ஆகியது. மொத்த விற்பனைத்துறையில்தான் பெரும்பான்மை அதிகரிப்பு காணப்பட்டது.
சிங்கப்பூர் பொருளியலில் மொத்த விற்பனைத்துறை இரண்டாவது ஆகப்பெரிய துறையாகத் திகழ்கிறது.
சென்ற ஆண்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் அந்தத்துறை 18.6% ஆக இருந்தது. கடந்த 2022 டிசம்பர் வாக்கில் அந்தத் துறையில் 300,000க்கும் மேற்பட்டோர் வேலை பார்த்தனர்.
மொத்த விற்பனைத்துறையைப் பொறுத்தவரை வெளி தேவைகள் சரியில்லாமல் போனதால் ஆட்குறைப்பு அதிகமாகிவிட்டது என்று அமைச்சு குறிப்பிட்டது.
இதர துறைகளைப் பொறுத்தவரை ஆட்குறைப்பு பொதுவாக நிலையாக இருந்தது அல்லது குறைந்தது.
இந்த ஆண்டின் மூன்றாவது காலாண்டில் நிறுவனங்கள் சீரமைக்கப்பட்டன. இதுதான் ஆட்குறைப்பிற்கான மிக முக்கிய காரணம் என்று அமைச்சு கூறியது.
இந்த ஆண்டின் ஜூலை முதல் செப்டம்பர் வரையிலான மூன்று மாதங்களில் கட்டுமானத்துறையில் 200 பேர் வேலை இழந்தனர். அதே காலத்தில் உற்பத்தித் துறையில் 800 பேர் ஆட்குறைப்புக்கு ஆளாயினர்.
சேவைத் துறை 3,100 ஊழியர்களைக் குறைத்தது. இந்த எண்ணிக்கை முந்தைய காலாண்டில் 2,550 ஆக இருந்தது.
செப்டம்பர் மாத வாக்கில் வேலையின்றி இருந்த சிங்கப்பூர்வாசிகளின் எண்ணிக்கை 68,000. இது ஜூன் மாதம் 65,600 ஆக இருந்தது.
என்றாலும்கூட வேலையின்மை விகிதம் செப்டம்பரில் ஒட்டுமொத்தமாக 2% என்ற அளவில் பெரும்பாலும் சீராகவே இருந்தது.
இது சிங்கப்பூரர்களைப் பொறுத்தவரை 3.4% ஆகவும் நிரந்தரவாசிகளைப் பொறுத்தவரை 3.3% ஆகவும் நிலவியது.
வெளிநாடுகளில் இருந்து வந்து வேலைபார்க்கும் இல்லப் பணிப்பெண்களைச் சேர்க்காமல் கணக்கிட்டுப் பார்க்கையில் மொத்த வேலை நியமனங்கள் 24,000 கூடியது. இது தொடர்ந்து எட்டாவது காலாண்டாக கூடி வந்துள்ளது.
இருந்தாலும் ஓராண்டுக்கு முன்பு இருந்த சூழ்நிலையுடன் ஒப்பிடுகையில் வேலை நியமன வளர்ச்சி வேகம் மெதுவடைந்து இருப்பதாக அமைச்சு தெரிவித்துள்ளது.
அடுத்த மூன்று மாதங்களில் ஊழியர்களை வேலையில் சேர்க்கப்போவதாக கோடிகாட்டிய நிறுவனங்களின் விகிதம் ஜூனில் 58.2% ஆக இருந்தது, இது செப்டம்பரில் 42.8% ஆகக்குறைந்தது.
ஊழியர்களின் ஊதியத்தை உயர்த்தப்போவதாக கோடிகாட்டிய நிறுவனங்கள் அதே காலகட்டத்தில் 28 விழுக்காட்டிலிருந்து 18 விழுக்காடாகக் குறைந்தது.
இந்த ஆண்டின் மூன்றாவது காலாண்டிற்கான ஊழியர் நிலவர இறுதி அறிக்கை டிசம்பர் நடுப்பகுதியில் வெளியிடப்படும்.