தங்களின் ‘மெக்லேரன்’ சொகுசு கார்களை சிங்கப்பூரிலிருந்து மலேசியாவுக்கு ஊர்வலமாக ஓட்டிச் செல்ல நினைத்த ஓட்டுநர்கள், ஞாயிற்றுக்கிழமையன்று விபத்தில் சிக்கினர். மூன்று வாகனங்கள் ஒன்றின்மேல் ஒன்று மோதியதில் ஒரு காருக்குப் பெருத்த சேதம் ஏற்பட்டது.
ஜோகூரின் குளுவாங் பகுதியில் காலை 9 மணியளவில் விபத்து நேர்ந்ததாக உள்ளூர்க் காவல்துறையினர் தெரிவித்தனர்.
முதல் வாகனம் வலப்பக்கம் திரும்புவதற்காக வேகத்தைக் குறைத்ததை அடுத்து இரண்டாவது வாகனத்தை ஓட்டியவர் உடனே ‘பிரேக்’ போட்டார். ஆனால், மூன்றாவது கார் கட்டுப்பாட்டை இழந்ததால் இரண்டாவது கார் மீது மோதி அது பின்னர் முதல் காரை மோதிவிட்டதாகக் கூறப்படுகிறது.
சிங்கப்பூரில் பதிவுசெய்யப்பட்ட மூன்று கார்களையும் ஓட்டிச் சென்றவர்கள் காயமின்றித் தப்பினர். இதற்கிடையே, மோட்டார் வாகனத்தைக் கட்டுப்படுத்தத் தவறியதற்காகவும் விபத்து நேரக் காரணமாக இருந்ததற்காகவும் அவர்கள் மீது விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
ஊர்வலத்தில் மொத்தம் ஆறு கார்கள் இருந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.