ஜெனிவாவை மையமாகக் கொண்ட தனியார் வங்கி நடத்திய வேலை வாழ்க்கை ஆய்வு அறிக்கை, ஆசிய பசிபிக் வட்டாரத்தில் உள்ள பணக்காரர்களை ஒப்பிடுகையில் சிங்கப்பூரின் பணக்காரர்கள் மகிழ்ச்சியாக இல்லை என்று தெரிவிக்கிறது.
சுவிட்சர்லாந்தின் ‘பாங்க் லொம்பார்ட் ஒடியே அண்ட் சியே’ வங்கி நடத்திய ஆய்வில், வட்டார நாடுகளில் சிங்கப்பூர் பணக்காரர்கள் மகிழ்ச்சி அளவில் பின்தங்கிய நிலையில் உள்ளனர் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
வியாழக்கிழமை (நவம்.2) வெளியிடப்பட்ட ஆய்வில் வேலை-வாழ்க்கை மகிழ்ச்சி நிலை தரவரிசையில் 72.7 விழுக்காட்டுடன் தாய்லாந்து முதலிடத்திலும் ஆஸ்திரேலியா இரண்டாம் இடத்திலும் வந்தன.
சிங்கப்பூர் பணக்காரர்கள் வேலையிடத்தில் அதிக நேரம் செலவிடுவதே மகிழ்ச்சியில் பின்தங்கியுள்ளதற்குக் காரணம் என்று அறிக்கை கூறுகிறது.
நீக்குப்போக்கான வேலையிடம் பற்றி ஆய்வு நடத்தும் நிறுவனமான ‘தி இன்ஸ்டன்ட் குரூப்’ லண்டனில் செயல்படுகிறது. அந்நிறுவனத்தின் ஆய்வில், ஆசிய பசிபிக் வட்டாரத்தில் உள்ள 10 நாடுகளிலேயே சிங்கப்பூரில்தான் ஆகக் கூடுதலாக வாரத்திற்கு 45 மணி நேரம் வேலை செய்ய வேண்டியுள்ளது என்று அறியப்படுகிறது.
ஆசியாவின் செல்வப் பரிவர்த்தனையில் ஏற்பட்டுள்ள பெரும் மாற்றங்களை முன்வைத்து, இளம் சமுதாயத்தினர் வேலையே வாழ்க்கை, வாழ்கையே வேலை என்ற மனநிலையிலிருந்து விலகிவிடுவர் என்று சுவிட்சர்லாந்தின் லொம்பார்ட் நிறுவனம் நடத்திய அதே ஆய்வறிக்கை தெரிவிக்கிறது.
கடந்த மே மற்றும் ஜூன் மாதங்களில் சிங்கப்பூர், ஹாங்காங், ஜப்பான், தாய்லாந்து, பிலிப்பீன்ஸ், தைவான், ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளில் மேல்மட்டத்தில் உள்ள 460க்கும் மேற்பட்டோரிடம் வேலை-வாழ்க்கை சமநிலை குறித்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.