பிரிட்டனில் இயங்கும் ‘குவாக்குவரெலி சைமன்ட்ஸ் (கியூஎஸ்) என்ற உலகின் உயர்கல்வித் தர அளவீட்டு நிறுவனம் வெளியிட்ட ‘சிறந்த ஆசியப் பல்கலைக்கழகங்கள் 2024’ பட்டியலில் சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகம் மூன்றாம் இடத்துக்கு இறங்கியது.
இதற்குமுன், 2019 முதல் 2022 வரை ஆசிய அளவில் முதல்நிலையில் இருந்த தேசிய பல்கலைக்கழகம், 2023ல் இரண்டாம் இடத்தைப் பிடித்தது.
இம்முறை சிங்கப்பூரின் நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகம், ஒரு படிமேல் சென்று, சீனாவின் சிங்ஹுவா பல்கலைக்கழகத்துடன் நான்காம் இடத்தைப் பகிர்ந்துகொண்டுள்ளது..
சீனாவின் பீக்கிங் பல்கலைக்கழகம் 2023லிருந்து தொடர்ந்து முதல் இடத்தை தக்கவைத்துக் கொண்டுள்ளது. ஹாங்காங் பல்கலைக்கழகம் ஈரிடங்கள் முன்னேறி, இரண்டாம் இடத்தைப் பிடித்துள்ளது.
உலகத் தரவரிசையில் இடம்பெற, எல்லைகளைத் தாண்டி, சிறந்த எதிர்காலத்தை உருவாக்க முயலும் பல்கலைக்கழகச் சமூகத்தின் அங்கமாகிய கல்வியாளர்கள், ஆய்வாளர்கள், ஊழியர்கள், மாணவர்கள், முன்னாள் மாணவர்கள் ஆகியோரின் திறமையே முக்கியக் காரணம் என்று தேசிய பல்கலைக்கழகப் பேச்சாளர் ஓர் அறிக்கையில் கூறினார்.
“நல்ல, மீள்திறன்மிக்க இளம் உள்ளங்களை பற்பல கல்விக் கலைத்துறைகளிலும் வளர்த்து, ஆய்வுகள் மேற்கொண்டு, உலகப் பிரச்சினைகளுக்கு தீர்வுகளைத் தேடுவதில் உறுதிமேற்கொண்டுள்ளோம். இதன்வழி வலுவான பலதரப்பட்ட திறன்களைக் கொண்ட ஆசிரியர்களையும் அறிஞர்களையும் கட்டமைப்பதே தேசிய பல்கலைக்கழகத்தின் இலக்கு,” என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுவரை இல்லாத அளவு இந்த ஆண்டின் ஆசிய உயர்கல்வி நிலையங்கள் தரவரிசைப் பட்டியலில் 856 பல்கலைக்கழகங்கள் இடம்பெற்றுள்ளன. பல தரவுகளைக் கொண்டு கல்வி நிலையங்கள் மதிப்பிடப்படுகின்றன. தரம், ஆய்வுகளின் எண்ணிக்கை, பயிற்சிக்கான வளங்கள், அனைத்துலக மாணவர்களுக்கு வழங்கப்படும் வாய்ப்புகள் போன்றவை அவற்றுள் சில.
இந்தியாவின் 148 பல்கலைக்கழகங்கள் தரவரிசைப் பட்டியலில் இடம்பிடித்துள்ளன. சீனாவின் 133 பல்கலைக்கழகங்களும் ஜப்பானின் 96 பல்கலைக்கழகங்களும் பட்டியலில் இடம்பெற்றுள்ளன.