வீடமைப்பு வளர்ச்சிக் கழக (வீவக) மறுவிற்பனை வீட்டு விலை அக்டோபரில் 0.5 விழுக்காடு உயர்ந்தது. மேலும், முந்தைய மாதத்தில் சற்று குறைந்திருந்த விலை மீண்டும் ஏறத் தொடங்கியதால் அதிக வீடுகளும் விற்கப்பட்டன.
சொத்துச் சந்தைத் தளமான ‘99.கோ’, ‘எஸ்ஆர்எக்ஸ்’ ஆகியவை வியாழக்கிழமை வெளியிட்ட தரவுகளின் அடிப்படையில், செப்டம்பரில் ஏற்பட்ட 0.6 விழுக்காடு சரிவைத் தொடர்ந்து, வீவக மறுவிற்பனை வீட்டு விலை அக்டோபரில் விரைந்து ஏறத்தொடங்கியது. ஆண்டு அடிப்படையில் 5.3 விழுக்காடு ஏற்றம் கண்டுள்ளது.
முந்தைய மாதத்தில் ஏற்பட்ட 19.7 விழுக்காடு சரிவுக்கு மாறாக அக்டோபரில் மறுவிற்பனை வீட்டு விற்பனை 10.8 விழுக்காடு உயர்ந்தது. 2,200 வீடுகள் விற்கப்பட்டன.
2022 அக்டோபர் மாதத்துடன் ஒப்பிடுகையில் பரிவர்த்தனைகள் 12 விழுக்காடு அதிகரித்தன.
தற்போது குறிப்பிடத்தக்க மறுவிற்பனைக் கட்டுப்பாடுகள் இல்லாததால், வீடு வாங்குவோர் மத்திய வட்டாரக் குடியிருப்புகளைத் தேடுவதாகவும், அந்த வீடுகளுக்குச் சற்று கூடுதல் கட்டணம் செலுத்த அவர்கள் தயாராக இருப்பதாகவும் ஹட்டன்ஸ் ஆசியா தலைமை நிர்வாகி மார்க் யிப் கூறினார்.
2024ஆம் ஆண்டின் பிற்பகுதியிலிருந்து நடப்புக்கு வரவிருக்கும் வீவக விடுகளுக்கான மறுசீரமைப்பின் கீழ், விருப்பமான இடங்களில் தேவைக்கேற்பக் கட்டப்படும் அடுக்குமாடி வீடுகள் பிரதான, பிளஸ் பிரிவுகளின் கீழ் வரும். இதில் 10 ஆண்டு குறைந்தபட்சக் குடியிருப்புக் காலகட்டம் போன்ற கடுமையான மறுவிற்பனைக் கட்டுப்பாடுகள் இருக்கும்.
புதிய தனியார் வீடுகளோடு அதிகளவில் வீவக வீடுகளை விற்றதும் அக்டோபரில் விற்பனை அதிகரித்ததற்குக் காரணமாக இருக்கலாம் என்று ப்ராப்னெக்ஸ் ரியால்டி நிறுவனத்தின் ஆய்வு, உள்ளடக்கப் பிரிவின் தலைவர் வோங் சீவ் யிங் கூறினார்.
2023ஆம் ஆண்டின் மூன்றாம் காலாண்டில் கிட்டத்தட்ட 9,000 தனியார் வீடுகளும் எக்சிகியூட்டிவ் கூட்டுரிமை வீடுகளும் கட்டி முடிக்கப்பட்டன. இது 2016ஆம் ஆண்டிற்குப் பிறகு காலாண்டு அடிப்படையில் நடந்துள்ள ஆக அதிகமான விநியோகமாகும் என்று நகர மறுசீரமைப்பு ஆணையத்தின் தரவுகளை மேற்கோள் காட்டி திருவாட்டி வோங் கூறினார்.
அக்டோபரில் 41 வீடுகள் குறைந்தது 1 மில்லியன் வெள்ளிக்கு கைமாறின. இவற்றுடன் 2023லிருந்து இதுவரை மொத்தம் 377 வீட்டுகள் மில்லியன் வெள்ளிக்கு விற்கப்பட்டுள்ளன.
இது 2022 முழுவதும் விற்பனையான 369 மில்லியன் வெள்ளி வீடுகளைவிட இது அதிகம்.
அக்டோபரில் விற்கப்பட்ட மில்லியன் வெள்ளி வீடுகள் அனைத்தும் முதிர்ச்சியடைந்த வட்டாரங்களில் இருந்தன. புக்கிட் மேரா, பீஷான் வட்டாரங்களில் தலா ஏழு வீடுகளும், குவீன்ஸ்டவுனில் ஆறு வீடுகள், காலாங்/வாம்போ, கிளமெண்டி வட்டாரங்களில் தலா ஐந்து வீடுகளும் மில்லியன் வெள்ளிக்கு விற்பனையாகின.
ஹெண்டர்சன் ரோடு புளோக் 96Aயில் 19க்கும் 21க்கும் இடைப்பட்ட தளத்தில் அமைந்துள்ள ஐந்தறை வீடு ஆக அதிகமான விலையில் $1.45 மில்லியனுக்கு விற்பனையானது.
முதிர்ச்சி அடையாத வட்டாரத்தின் அதிகபட்ச பரிவர்த்தனை விலை ஜூரோங் ஈஸ்ட் ஸ்திரீட் 21ல் இடம்பெற்றது. அந்த 140 சதுர மீட்டர் எக்சிகியூட்டிவ் வீடு $995,888க்கு விற்கப்பட்டது.
முதிர்ச்சி அடையாத வட்டாரங்களில் கடந்த 12 மாதங்களில் இல்லாத அளவுக்கு விலை 0.8 விழுக்காடு உயர்ந்ததாக இஆர்ஏ சிங்கப்பூர் முக்கிய நிர்வாக அதிகாரி யூஜின் லிம் குறிப்பிட்டார்.
வீட்டின் மாதிரியைப் பொறுத்தவரையில் எக்சிகியூட்டிவ் வீடுகளின் விலை 1.7 விழுக்காடு உயர்ந்தன. அதே நேரத்தில் ஐந்தறை வீட்டு விலை 0.4 விழுக்காடு குறைந்துள்ளது.
புதிய எக்சிகியூட்டிவ் வீடுகள் எதுவும் கட்டப்படாததால், அவ்வகை வீடுகளின் விலை உயர இது வழிவகுக்கும் என்று திரு லிம் கூறினார்.
இதற்கிடையே, 2022 செப்டம்பரில் அறிமுகப்படுத்தப்பட்ட சொத்து விலை தணிப்பு நடவடிக்கைகள் காரணமாக ஐந்றை வீடுகளுக்கான தேவை தொடர்ந்து குறைந்து வருகிறது. தனியார் வீடுகளை விற்றுவிட்டு மறுவிற்பனை வீடுகளை வாங்க விரும்புவோர், வீட்டை விற்ற பின்னர் 15 மாத காலம் காத்திருக்க வேண்டும்.
எனினும், 55 வயதும் அதற்கு மேற்பட்ட வயதுமுடையோர் தங்கள் தனியார் வீடுகளை விற்று, நான்கு அறை அல்லது சிறிய மறுவிற்பனை வீடுகளை வாங்க இந்தக் காத்திருப்புக் கால கட்டுப்பாடு இல்லை என்பதால் மூன்று, நான்கு அறை வீடுகளுக்கான தேவை தொடர்கிறது. அக்டோபரின் மொத்த பரிவர்த்தனைகளில் கிட்டத்தட்ட முக்கால் பங்கு இத்தகைய வீடுகள் சார்ந்தவை என்று திரு லிம் கூறினார்.
ஒட்டுமொத்தத்தில், வீவக மறுவிற்பனை வீடுகளின் விலை ஏற்றம் 2023ஆம் ஆண்டில் வாங்குபவர்களிடையே இருந்த எச்சரிக்கை உணர்வு, சொத்து விலை தணிப்பு நடவடிக்கைகளின் தாக்கம், பிடிஓ வீடுகளின் எண்ணிக்கை அதிகரிப்பு ஆகியவற்றினால் மிதமாகவே உள்ளது என்று திருவாட்டி வோங் கூறினார்.