மத்திய கிழக்கில் நடந்து வரும் இஸ்ரேல் - ஹமாஸ் மோதலுக்கு இரு மாநில தீர்வு ஒன்றே நீண்ட கால விடையாக உள்ளது என்று பிரதமர் லீ சியன் லூங் புதன்கிழமை இரவு தெரிவித்தார்.
புளூம்பெர்க் செய்தியின் தலைமை ஆசிரியர் ஜான் மிக்லெத்வெய்ட் உடன் ப்ளூம்பெர்க் புதிய பொருளியல் மன்றத்தில் உரையாடலில் பங்கேற்ற திரு லீ, அத்தகைய தீர்வு மிகவும் கடினம் என்பதையும் ஒப்புக்கொண்டார்.
ஆனால், இரு மாநில தீர்வுக்கு மாற்றாக இருப்பது ஒரே மாநில தீர்வு. இதில் ஒரு பக்கம் அழிந்தாக வேண்டும். அது கற்பனைக்கும் எட்டாத ஒன்று. எனவே இரு மாநில தீர்வை நோக்கிச் செயல்பட முடியாவிட்டால், தலைமுறைகளாக இந்த பரஸ்பர அழிவுச் சுழற்சியிலேயே இருக்க வேண்டியிருக்கும் என்றார் அவர்.
பிரதமர் லீ, மோதலின் மீதான சிங்கப்பூரின் நிலைப்பாட்டை மீண்டும் வலியுறுத்தினார், இது நாட்டின் தேசிய நலன்களோடு மக்களின் உணர்வுகளையும் கருத்தில் கொள்கிறது என்று குறிப்பிட்டார்.
45 நிமிட உரையாடலில், தாக்குதலால் ஏற்பட்டு வரும் உயிர்ப்பலிகள், மனித அவலம் குறித்துப் பேசிய பிரதமர் லீ, உலகெங்கிலும் உள்ள அனைவரும் இதை விரக்தியுடன் பார்த்தனர், நிச்சயமாக இது நிறுத்தப்பட வேண்டும் என்றார். சரி, தவறு எதுவாக இருந்தாலும், மனிதாபிமானத்தில் அக்கறை காட்ட வேண்டும் என்றார்.
அக்டோபர் 7 ஹமாஸ் இஸ்ரேல் மீது நடத்திய தாக்குதலையும், தற்போது காஸாவில் நடக்கும் மிகவும் துயரமான விஷயங்களையும் அங்கீகரிப்பது முக்கியம் என்று அவர் மேலும் கூறினார்.
அனைத்துலக விதிமுறைகளைக் கடைப்பிடிக்குமாறும் அப்பாவிப் பொதுமக்கள் மீது அக்கறை காட்டுமாறும் இஸ்ரேலியர்களையும் அனைவரையும் அறிவுறுத்த வேண்டும் என்று பிரதமர் லீ கோரினார்.
வட்டாரப் பாதுகாப்பை பாதிக்கும் போர் குறித்து, குறிப்பாக மலேசியப் பிரதமர் அன்வர் இப்ராஹிம் பாலஸ்தீனர்களுக்கு ஆதரவு தெரிவிப்பது குறித்த கேள்விக்கு பதிலளித்த பிரதமர் லீ, அரசதந்திர ஆதரவு சிரமம் அல்ல, ஆனால் பயங்கரவாதம் அச்சுறுத்தல் என்று கூறினார்.
போர் தொடங்கியதிலிருந்து ஐரோப்பாவிலும் அமெரிக்காவில் நடந்த தனிப்பட்ட தாக்குதல்களை திரு லீ, “உலகின் இந்தப் பகுதியிலும் அது நடக்கலாம்,” என்றார்.
இஸ்லாமிய நாடான ஈராக், சிரியா சார்பில் மத்திய கிழக்கில் போராட அல்லது ‘கிறிஸ்ட்சர்ச்’ துப்பாக்கிச் சூட்டைப் போல இங்குள்ள பள்ளிவாசல்களில் முஸ்லிம்களைத் தாக்க குண்டு துளைக்காத உடைகள், கத்திகளை வாங்கிய பதின்மவயதினர் உட்பட சிங்கப்பூரில் இதற்குமுன் சுயத்தீவிரவாதப் போக்குடைய தனிநபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர் என்றார் அவர்.
“இந்த வட்டாரத்தில் இன்னும் பயங்கரவாத குழுக்கள் உள்ளன,” என்ற பிரதமர் லீ, இஸ்லாமிய தீவிரவாதிக் குழுவான ஜமா இஸ்லாமியாவை சுட்டினார். திட்டமிட்ட தாக்குதல்களை இங்கு நடத்துவதற்கு முன்னதாக அந்த அமைப்பின் உறுப்பினர்கள் 2001ஆம் ஆண்டில் இங்கு கைது செய்யப்பட்டதையும் குறிப்பிட்டார்.
“அவர்கள் கவனித்துக் கொண்டே இருப்பார்கள். அவர்களைப் பின்பற்றுபவர்களில் சிலர் ஏதாவது திட்டமிடலாம். அதைத் தீவிரமாக எடுத்துக்கொள்ள வேண்டும்,” என்றார் பிரதமர் லீ.