சிங்கப்பூர் சிவில் விமானப் போக்குவரத்து ஆணையமும் (சிஏஏஎஸ்) இந்த வட்டார விமானப் போக்குவரத்து ஆணையங்களும் இணைந்து வான் டாக்சி, ஆளில்லா வானூர்தி (ட்ரோன்) செயல்பாடுகளை ஒழுங்குபடுத்துவதற்கான பாதுகாப்பு விதிகள், தரங்கள் தொடர்பான விதிமுறைகளை உருவாக்க உள்ளன.
வளர்ந்து வரும் வான் டாக்சி, ஆளில்லா வானூர்தி துறைகளை நிர்வகிக்க ஒவ்வொரு நாடும் பின்பற்றக்கூடிய ஒழுங்குமுறை தொகுப்பை 2025க்குள் உருவாக்குவது இலக்கு.
சிஏஏஎஸ் முதல் முறையாக வியாழக்கிழமை ஒருங்கிணைந்த அந்தக் கூட்டத்தில் சீனா, ஜப்பான் உட்பட 17 ஆசிய பசிபிக் சிவில் விமானப் போக்குவரத்து அமைப்புகளின் பிரதிநிதிகள், 24 தனியார் துறை நிறுவனங்கள், ஸ்கைபோர்ட்ஸ் இன்பிராஸ்டக்சர்ஸ், வெர்ட்டிகல் ஏரோஸ்பேஸ் போன்ற நிறுவனங்கள் பங்கேற்றன.
ஆளில்லா வானூர்திகளுக்கான இரு முன்னுரிமைகளாக தொழில்நுட்ப வழிகாட்டுதல், தனிப்பட்ட பயிற்சி இரண்டும் அடையாளம் காணப்பட்டன.
வான் டாக்சியைப் பொறுத்தவரை, சான்றிதழ், ஒரு நாட்டின் தேசிய முகமைகளுக்கு இடையிலான ஒத்துழைப்பு, இந்த புதிய விமானப் போக்குவரத்தை ஊக்குவிக்கும் பொதுக் கல்வி உள்ளிட்ட ஆறு முன்னுரிமை அம்சங்களில் அதிகாரிகள் உடன்பாடு கண்டனர். செங்குத்தாக தரையிறங்கக்கூடிய சிறிய விமானங்களான வான் டாக்சிகள் ஒரு நாட்டிற்குள் குறுகிய தூர பயணங்களுக்கானது.
ஒழுங்குமுறை நிர்வகிப்பாளர்களுக்கிடையேயான ஒத்துழைப்பு, வான் டாக்சி செயல்பாடுகளுக்கான அபாயங்கள் எவ்வாறு குறைக்கப்படுகின்றன என்பதை சிஏஏஎஸ் புரிந்துகொள்ள அனுமதிக்கும். மேலும் சிங்கப்பூருக்கான ஒழுங்கு விதிமுறைகளுக்கு பயன்படுத்தவும் வகை செய்யும் என்று சிஏஏஎஸ் தலைமை இயக்குநர் ஜெனரல் ஹான் கோக் ஜுவான் குறிப்பிட்டார்.