அறுவை சிகிச்சை அறையில் பெண்ணை மானபங்கப்படுத்தியதாக நம்பப்பட்ட ஓர் ஆடவர் அந்தக் குற்றச்சாட்டிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்.
நவம்பர் மாதம் மூன்றாம் தேதியன்று 43 வயது மிஜோஸ் பொலிகார்ப்போ அரானாய்டோ குற்றச்சாட்டிலிருந்து விடுவிக்கப்பட்டார். அதனைத் தொடர்ந்து பிலிப்பீன்சைச் சேர்ந்த அவர்மீது இதே குற்றச்சாட்டை இனி சுமத்த முடியாது.
காயம் விளைவிப்பது, மானபங்கம் போன்ற சில குற்றங்களுக்கு மட்டும் குற்றச்சாட்டுகளைத் தள்ளுபடி செய்ய முடியும். அவ்வாறு செய்ய சந்தேக நபர், பாதிக்கப்பட்டவருடன் சமரசம் செய்துகொள்ளவேண்டும். பொதுவாகக் கட்டணம் செலுத்துவது அல்லது மன்னிப்புக் கேட்பதன் மூலம் அது சாத்தியமாகும்.
குற்றம் இடம்பெற்ற சூழல் போன்ற அம்சங்களைக் கருத்தில்கொண்டு பொது வழக்கறிஞர் சந்தேக நபரைக் குற்றச்சாட்டிலிருந்து விடுவிப்பது குறித்து முடிவெடுப்பார்.
சிங்கப்பூர் நிரந்தரவாசியான திரு அரானாய்டோ, 2022ஆம் ஆண்டு மார்ச் மாதம் 22ஆம் தேதியன்று ஆர்ச்சர்ட் சாலையில் உள்ள பேரகன் கடைத்தொகுதியில் இருக்கும் ஒரு மருந்தகத்தில் காலை 9.45 மணிக்கும் 10.20 மணிக்கும் இடைப்பட்ட நேரத்தில் பெண்ணை மானபங்கப்படுத்தியதாகச் சந்தேகிக்கப்பட்டது. திரு அரானாய்டோ மருந்தகத்தில் இருந்ததற்கான காரணத்தை நீதிமன்ற ஆவணங்கள் குறிப்பிடவில்லை.