கர்ப்ப காலத்தில் கொவிட்-19 தடுப்பூசியைப் போட்ட தாய்மார்களுக்குப் பிறக்கும் குழந்தைகளுக்கு குறைந்தது ஆறு மாத காலத்திற்கு நோயிலிருந்து பாதுகாப்பு இருக்கும் என்பது உள்ளூரில் நடத்தப்பட்ட ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
ஆனால் கர்ப்பமாவதற்கு முன்பு தடுப்பூசி போட்டிருந்தால் அதில் எந்த நன்மையும் இல்லை என்று ஆய்வு தெரிவிக்கிறது.
கேகே மகளிர், சிறார் மருத்துவமனை இந்த ஆய்வை நடத்தியுள்ளது.
தாயாரையும் அவரை கர்ப்ப காலத்திலும் அவருக்குப் பிறக்கும் குழந்தையையும் கர்ப்பக் காலத்தில் போடப்படும் கொவிட்-19 தடுப்பூசி தீவிர ‘SARS-CoV-2’ தொற்றிலிருந்து பாதுகாக்க வலுவான வழி என்று ஆய்வுக்குத் தலைமை ஏற்ற கேகே மருத்துவமனையின் மூத்த குழந்தை தொற்றுநோய் சிகிச்சை நிபுணரான இணைப் பேராசிரியர் யங் சீ ஃபு தெரிவித்தார்.
சிங்கப்பூரில் ஆறு மாதங்களுக்குப் பிறகே குழந்தைகளுக்குத் தடுப்பூசி போட முடியும்.
இதனால் முதல் ஆறு மாதங்கள் குழந்தையைப் பாதுகாக்க, கர்ப்ப காலத்தில் தாய்மார்களுக்கு தடுப்பூசி போடுவதே சிறந்த வழி.
2022ஆம் ஆண்டில் ஜனவரிக்கும் செப்டம்பருக்கும் இடையே சிங்கப்பூரர்களுக்கும் நிரந்தரவாசிகளுக்கும் ஏறக்குறைய 22,000 குழந்தைகள் பிறந்தன. முதல் ஆறு மாதங்களில் குறைந்தபட்சம் ஒரு பெற்றோருக்கு கொவிட்-19 இருப்பது என கண்டறியப்பட்ட 7,292 குழந்தைகள் மட்டுமே ஆய்வில் சேர்க்கப்பட்டன.
இதில், 1,272 குழந்தைகள் தங்கள் வாழ்க்கையின் முதல் ஆறு மாதங்களில் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கர்ப்பக் காலத்தில் தடுப்பூசி போட்ட தாய்மார்களின் குழந்தைகளுக்கு தொற்று காலத்தில் ஒமிக்ரான் எக்ஸ்பிபி திரிபு தொற்றில் இருந்து 41.5 விழுக்காடு பாதுகாப்பு இருந்தது.
தாய்மார்கள் தங்களுடைய கர்ப்ப காலத்தில் குறைந்தது 3வது தடுப்பூசி போட்டவர்கள் 77 விழுக்காடு வரை பாதுகாப்பு பெற்றனர்.
“கர்ப்பக் காலத்தில் கூடுதல் தடுப்பூசி மற்றும் காலத்தில் போட வேண்டிய பரிந்துரைக்கப்பட்ட தடுப்பூசிகளைப் போட்டிருப்பது எந்த அளவுக்கு முக்கியம் என்பதை ஆய்வு வலியுறுத்துகிறது,” என்று பேராசிரியர் யங் தெரிவித்தார்.
குழந்தைகளின் முதல் ஆறு மாதங்கள் தொடர்பான ஆய்வின் முடிவுகள் வெள்ளிக்கிழமை அமெரிக்க மருத்துவ சங்கத்தின் சஞ்சிகையின் ஜமா நெட்வொர்க்கில் வெளியிடப்பட்டது.