கள்ளப் பணத்தை நல்ல பணமாக்குதல், பயங்கரவாதத்திற்கு நிதியளித்தல் ஆகியவை தொடர்பில் சிங்கப்பூரின் அபாயக் குறியீடு சற்று அதிகரித்துள்ளதாக ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது.
‘2023 பேசல் கள்ளப் பணத்தை நல்ல பணமாக்குதலுக்கு எதிரான (ஏஎம்எல்) குறியீடு’ 2022ஆம் ஆண்டில் கண்டறிந்ததில் சிங்கப்பூர் 10க்கு 4.28 புள்ளிகள் பெற்றிருந்தது.
இருப்பினும், இவ்வாண்டு அது 4.30 புள்ளிகள் பெற்றுள்ளது.
புள்ளிகள் அதிகமாக இருந்தால், கள்ளப் பணம் தொடர்பில் நாடு எதிர்நோக்கும் அபாயங்களும் அதிகம் என்று பொருளாகும்.
சிங்கப்பூரின் அபாயக் குறியீட்டில் காணப்படும் இந்தச் சிறு அதிகரிப்பு ‘அதிகப்படியானது அல்ல’ என்று சுவிட்சர்லாந்தில் அமைந்துள்ள ஆளுமைக்கான பேசல் கழகத்தில் பேசல் ஏஎம்எல் குறியீட்டு ஆய்வுத் திட்ட நிர்வாகி டாக்டர் கேத்தரினா போகஸ்லவ்ஸ்கா விளக்கினார்.
ஊழல், லஞ்சம், சுற்றுச்சூழல் குற்றங்கள் ஆகியவை தொடர்பில் சிங்கப்பூரின் அபாயக் குறியீடு சற்று ஏற்றம் கண்டதாக டாக்டர் போகஸ்லவ்ஸ்கா சுட்டினார்.