சிங்கப்பூரிலிருந்து சீனாவிற்கு, உரிமம் பெற்ற நிறுவனங்கள் மூலம் பணம் அனுப்பியோர் சீனாவில் உள்ள அதிகாரிகள் தங்கள் பணத்தை முடக்கியதாகப் புகாரளித்துள்ளனர். சிலர் தங்கள் பணம் பறிமுதல் செய்யப்பட்டதாகவும் புகார் கொடுத்துள்ளனர்.
இந்த ஆண்டு ஜனவரி 1ஆம் தேதி முதல் நவம்பர் 14ஆம் தேதி வரை இத்தகைய 39 புகார்கள் தரப்பட்டதாக ‘கேஸ்’ எனப்படும் சிங்கப்பூர் பயனீட்டாளர் சங்கம் கூறியது. அவற்றில் 14 புகார்கள், அக்டோபர் 18ஆம் தேதிக்குப் பிறகு அளிக்கப்பட்டதாக சங்கம் குறிப்பிட்டது.
சீனாவில் உள்ள வங்கிக் கணக்குகளுக்குத் தாங்கள் பணம் அனுப்பியபோது அந்த வங்கிக் கணக்குகளைச் சீன அதிகாரிகள் முடக்கியதாக பாதிக்கப்பட்டோர் தெரிவித்தனர் என்று சங்கத்தின் தலைவர் மெல்வின் யோங் கூறினார். சிலர் தங்கள் பணம் பறிமுதல் செய்யப்பட்டதாகக் கூறினர் என்றார் அவர்.
சீனக் குடியுரிமை பெற்ற 1,000 பேர், ஏறத்தாழ $5.6 மில்லியன் தொகை தொடர்பில் இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளனர். வாடிக்கையாளர்களை மேற்கோள்காட்டி சீன மொழி நாளிதழான லியன்ஹ சாவ்பாவ் அந்தத் தகவலை வெளியிட்டுள்ளது.
இதன் தொடர்பில் பணப் பரிவர்த்தனை நிறுவனங்கள் அவர்களுக்கு முழுமையான உதவி வழங்கும் என்று சிங்கப்பூர் நாணய ஆணையமும் காவல்துறையும் தெரிவித்துள்ளன.
தூதரக உதவிக்கு அவர்கள் சிங்கப்பூரில் அமைந்திருக்கும் சீனத் தூதரகத்தை நாடலாம் என்றும் ஆலோசனை கூறப்பட்டுள்ளது.