ஏறக்குறைய 6,500 உடற்குறையுள்ளோர் மற்றும் அவர்களை பராமரிப்பவர்களுக்கு எப்படி தங்களுடையப் பணத்தை நிர்வகித்து திட்டமிடுவது என்பது குறித்து கற்றுத் தரப்படவிருக்கிறது.
டிபிஎஸ் அறநிறுவனமும் எஸ்ஜி எனேபிளும் இந்த புதிய முயற்சியைத் தொடங்கியுள்ளன.
மின்னிலக்க வங்கி, மோசடி குறித்த விழிப்புணர்வு போன்ற தலைப்புகளிலும் அவர்களுக்கு கற்றுத் தரப்படும்.
மின்னிலக்க, நிதி அறிவை மேம்படுத்துவதால் அவர்கள் அதிக தன்னம்பிக்கையுடன் செயல்பட முடியும் என எதிர்பார்க்கப்படுவதாக செவ்வாய்க் கிழமை வெளியிட்ட அறிக்கையில் இரண்டு அமைப்புகளும் தெரிவித்தன.
டிபிஎஸ் அறநிறுவனம், இம்முயற்சிக்கு ஒரு மில்லியன் வெள்ளியை பங்களிக்கிறது. 2024ஆம் ஆண்டில் தொடங்கி அடுத்த மூன்று ஆண்டுகளில் சுமார் 6,500 உடற்குறையுள்ளோருக்கும் அவர்களை பராமரிப்பவர்களுக்கும் நிதி, மின்னிலக்க திறன்களை கற்பிப்பது அதன் நோக்கமாகும்.
எஸ்ஜி எனேபிள் வைத்திருக்கும் குழுவில் இடம்பெற்றுள்ளவர்களிடம் ஆய்வு நடத்தப்பட்டபோது எண்பது விழுக்காட்டினர் நிதி, மின்னிலக்க திறன்களை முக்கியமாக சுட்டிக் காட்டியிருந்தனர். அவர்களுடைய அன்றாட வாழ்க்கையில் தேவைப்படும் முக்கிய திறன்களாக அவை இருக்கின்றன.
தற்போதைய அவர்களுக்கான பயிற்சித் திட்டங்களில் இவை கற்றுக் கொடுக்கப்படுவதில்லை.
கடந்த ஆகஸ்ட் மாதம் உடற்குறையுள்ளோருக்கான கற்றல் விழா நடைபெற்றது. அதில் பங்கேற்ற உடற்குறையுள்ளோர், அவர்களை பராமரிப்பவர்களில் 50 விழுக்காட்டினர் நிதி மற்றும் சேமிப்பு, ரொக்கமில்லா பணம் செலுத்துதல், மின்னிலக்க வங்கி செயலி போன்றவற்றை கற்றுக் கொள்ள விருப்பம் தெரிவித்தனர்.
அதன் அடிப்படையில் புதிய முயற்சி இடம்பெறுகிறது. இம்முயற்சியின் ஒரு பகுதியாக டிபிஎஸ் அறநிறுவனமும் எஸ்ஜி எனேபிளும் கூட்டாக கற்றல் வழிகாட்டி முறையை உருவாக்க விருக்கின்றன. முப்பது பாடங்கள் தேர்ந்தெடுக்க வாய்ப்பு வழங்கப்படும்.