உற்பத்தித்துறை நிறுவனத்தில் பணியாற்றிக்கொண்டிந்தபோது ஊழியர் ஒருவர் இயந்திரத்தில் சிக்கித் தலை நசுங்கி உயிரிழந்தார். அவர் பாதுகாப்பு விதிமுறைகளைப் பின்பற்றியிருந்தால் மரணத்தைத் தவிர்த்திருக்கலாம் என்று மரண விசாரணை நீதிமன்றம் கூறியது.
விசாரணை குறித்த விவரங்கள் இவ்வாரம் வெளியிடப்பட்டது. அரசாங்க மரண விசாரணை அதிகாரி அதம் நகோதா, சீன நாட்டவரான சன் சைதாவ் என்ற ஊழியரின் வேலையிட மரணத்தை எதிர்பாராத விபத்து என்று தீர்ப்பளித்தார்.
கடந்த ஆண்டு பிப்ரவரி 11 அன்று, ஊழியர், காகித அட்டை தயாரிக்கும் இயந்திரத்தின் கழிவுகளை வெளியேற்றும்போது அதன் சன்னல் போன்ற இடைவெளிக்குள் மிகவும் நெருங்கிச் சென்றார். அந்த இயந்திரத்திற்குள் சிக்கி அவரது உடல் உள்ளே இழுக்கப்பட்டது. சம்பவ இடத்திலேயே அவர் மரணமடைந்தார்.
அந்த இயந்திரத்தை இயக்க அவருக்குப் பயிற்சி அளிக்கப்பட்டிருந்தது. அவ்வியந்திரம், வாடிக்கையாளர்களின் தேவைக்கேற்ப, காகித அட்டைகளை வளைத்து, பசையால் இணைத்து, மடித்து, பெட்டிகளாக்கி அடுக்கும் திறன் படைத்தது.