சில்லறை விற்பனை வாடிக்கையாளர்கள், சிங்கப்பூர் வங்கிகளின் கடன்பற்று அட்டைகளைப் பயன்படுத்தி இனி மின்னிலக்க நாணயங்களை வாங்க இயலாது.
மின்னிலக்க நாணயத்தைப் பயன்படுத்தி வர்த்தகம் செய்வதால் ஏற்படக்கூடிய பாதிப்புகள் குறித்து அவர்களுக்கு மின்னிலக்க நாணயச் சேவை வழங்குவோர் தெரியப்படுத்துவது கட்டாயம்.
சிங்கப்பூர் நாணய ஆணையம், மின்னிலக்க நாணயச் சேவை வழங்குவோர் தொடர்பில் பரிந்துரைத்துள்ள விதிமுறைகளில் இடம்பெற்றுள்ள நிபந்தனைகளில் அவையும் அடங்கும்.
இந்த விதிமுறைகள் அடுத்த ஆண்டு நடுப்பகுதி தொடங்கி கட்டங்கட்டமாக அமலுக்கு வரும்.
புதிய விதிகளின்கீழ், வாடிக்கையாளர்களை ஈர்க்கும் நோக்கில் மின்னிலக்க நாணயச் சேவை வழங்குவோர் ஊக்கத்தொகை வழங்க அனுமதி இல்லை.
மின்னிலக்க நாணயச் சேவை வழங்குவோர் நிதி அல்லது கடன் வழங்கும் சேவைகளில் ஈடுபட இயலாது.
வாடிக்கையாளரின் சொத்து மதிப்பைக் கணக்கிடும்போது, மின்னிலக்க நாணயங்களின் மதிப்பிற்கு ஓர் உச்ச வரம்பு உண்டு.
வாடிக்கையாளர் பாதுகாப்பிற்கு அப்பால், மின்னிலக்க நாணயச் சேவை வழங்குவோர் வர்த்தக நடத்தை விதிமுறைகளுக்கு ஏற்பவும் நடந்துகொள்ள வேண்டும்.
தொழில்நுட்பம், இணையப் பாதுகாப்பு ஆகியவற்றைப் பொறுத்தமட்டில், முக்கியக் கட்டமைப்புகள் தொடர்பில் சிங்கப்பூரில் நிதி நிறுவனங்களுக்கு அமல்படுத்தப்பட்டுள்ள விதிமுறைகள் அனைத்தும் மின்னிலக்க நாணயச் சேவை வழங்குவோர்க்கும் பொருந்தும்.
இந்த விதிகளை நடைமுறைப்படுத்துவதற்கு உரிய கால அவகாசம் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.