பலதரப்பு அமைப்புகளை வலுப்படுத்துவது மின்னிலக்க மேம்பாட்டுக்கு மெருகூட்டுவது ஆகிய நடவடிக்கைகளின் வாயிலாக ஐக்கிய நாட்டு சபையின் நீடித்த நிலைத்தன்மை சார்ந்த இலக்குகளை அடையும் முயற்சியில் முன்னேற்றம் காணமுடியும் என்று பிரதமர் லீ சியன் லூங் புதன்கிழமையன்று கூறினார்.
ஃபேஸ்புக் பதிவில் அவர் அதனைக் குறிப்பிட்டார்.
மெய்நிகரில் நடைபெற்ற ஜி20 கூட்டமைப்பு சந்திப்பில் கலந்துகொண்ட பிறகு திரு லீ அவ்வாறு சொன்னார். இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி சந்திப்பை ஏற்று நடத்தினார்.
சிங்கப்பூர் ஜி20 கூட்டமைப்பில் இடம்பெறவில்லை. இருந்தாலும் கூட்டமைப்பின் பல சந்திப்புகளில் கலந்துகொள்ளுமாறு சிங்கப்பூருக்கு அழைப்பு விடுக்கப்படுவது வழக்கம்.
“என்றும்போல் அனைவருக்காகவும் மேம்பட்ட உலகை உருவாக்க நான் இதர தலைவர்களுடன் இணைந்து பணியாற்ற ஆவலாக இருக்கிறேன்,” என்று திரு லீ கூறினார்.
ஜி20 கூட்டமைப்பு 1999ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது.