சிங்கப்பூரின் நிலப் போக்குவரத்து ஆணையம், இதுவரை இல்லாத அளவுக்கு 360 மின்சாரப் பேருந்துகளை வாங்குகிறது.
இதற்காக இரண்டு நிறுவனங்களிடம் அது ஒப்பந்தம் செய்துள்ளது. இதன் மதிப்பு மொத்தம் $166.4 மில்லியன் ஆகும். புதிய பேருந்துகள் அனைத்தும் 2024ஆம் ஆண்டுவாக்கில் பொதுமக்களுக்கான சேவையில் ஈடுபடுத்தப்படும்.
மின்சக்தியில் இயங்கும் பேருந்துகளுக்கு வசதியாக பேருந்து பணிமனைகளில் மின்னேற்றிகளை அமைப்பதற்கும் ஆணையம் மேலும் இரண்டு நிறுவனங்களுக்கு ஒப்பந்தக் குத்தகையை வழங்கியுள்ளது. தற்போது செங்காங் வெஸ்ட், ஈஸ்ட் கோஸ்ட், கலி பத்து ஆகிய பணிமனைகளில் மின்னேற்றும் சாதனங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன.
அண்மைய கொள்முதலுடன் சேர்த்து சிங்கப்பூர் சாலைகளில் மின்சக்தியில் ஓடும் பொதுப் பேருந்துகளின் எண்ணிக்கை 420க்கு அதிகரிக்கிறது. இது, மொத்த பேருந்துகளில் ஏழு விழுக்காடாகும்.
நிலப் போக்குவரத்து ஆணையம், புதிய தொழில்நுட்பத்தை சோதித்துப் பார்க்கும் முன்னோடித் திட்டமாக 2018ல் ஐம்பது மில்லியன் செலவில் 60 மின்சாரப் பேருந்துகளை வாங்கியது. 2022ஆம் ஆண்டின் இறுதியில் மொத்தம் 5,847 பேருந்துகள் சேவையில் இருந்தன.
பொதுப் போக்குவரத்து பேருந்துகளில் பாதியை 2030ஆம் ஆண்டுக்குள் மின்சக்தியில் இயங்கும் பேருந்துகளாக மாற்றுவது சிங்கப்பூர் அரசாங்கத்தின் நோக்கமாகும். அதன் ஒரு பகுதியாக புதிய மின்சாரப் பேருந்துகள் வாங்கப்படுகின்றன.
“அதிகமான பயணிகள் பசுமையான சூழலில் அமைதியான பயணத்தை அனுபவிக்கலாம்,” என்று புதிய மின்சாரப் பேருந்துகள் வாங்குவது குறித்து நவம்பர் 25ஆம் தேதி அறிவித்த தற்காலிக போக்குவரத்து அமைச்சர் சீ ஹொங் டாட் தெரிவித்தார்.
அனைத்து 360 மின்சாரப் பேருந்துகளும் மூன்று வாயில்களுடன் ஓரடுக்குக் கொண்டவை. ஒவ்வொரு பேருந்திலும் தகவல் மின்திரை இடம்பெற்று இருக்கும். அதில் பயணிகளுக்கான பயண விவரங்கள் வெளியிடப்படும். மோதலை எச்சரிக்கும் நவீன வசதி பேருந்துகளில் செய்யப்பட்டுள்ளது. ஓட்டுநரின் சோர்வை கண்காணிக்கும் சாதனம், டயரின் காற்று அழுத்தத்தைக் காட்டும் கருவிகள் போன்ற வசதிகளும் மின்சாரப் பேருந்துகளில் இடம்பெற்றுள்ளன.
புதிய மின்சாரப் பேருந்துகள் 2024 டிசம்பரிலிருந்து படிப்படியாக பயணிகளுக்கான சேவையில் சேர்க்கப்படும் என்று நிலப் போக்குவரத்து ஆணையம் தெரிவித்தது.
அப்போது அவற்றுக்குப் பதிலாக 17 ஆண்டுகள் பழமையான டீசல் பேருந்துகள் சேவையிலிருந்து அகற்றப்படும்.
ஆனால் 360 பேருந்துகளும் முழுமையாக எப்போது பொதுச் சேவையில் சேர்க்கப்படும் என்ற விவரத்தை அது தெரிவிக்கவில்லை.
“வரும் ஆண்டுகளில் மேலும் மின்சாரப் பேருந்துகளை வாங்கவும் அவற்றை இயக்குவதற்கான வசதிகளுக்கும் பராமரிப்புகளுக்கும் அதிக ஒப்பந்தங்கள் செய்யப்படும்,” என்று ஆணையம் கூறியது.
அண்மைய 360 மின்சாரப் பேருந்துகளில் 108.1 மில்லியன் வெள்ளி மதிப்புள்ள 240 பேருந்துகளை சீனாவின் வாகனத் தயாரிப்பு நிறுவனமான பிஒய்டி விநியோகிக்கிறது. மின்சார வாகனங்களில் பிரமாண்ட நிறுவனமான அது, உருவாக்கிய கே9 மின்சாரப் பேருந்துகள் ஏற்கெனவே சிங்கப்பூரில் பொதுப் பேருந்து தடங்களில் இயக்கப்பட்டு வருகின்றன.
மற்றொரு ஒப்பந்தம், சைக்கிள் அண்ட் கேரியஜ் ஆட்டோமோட்டிவ் நிறுவனத்துக்கு வழங்கப்பட்டுள்ளது. இந்த நிறுவனம், சீனாவின் ‘ஷோங்டோங் பஸ்’ என்ற நிறுவனத்துடன் சேர்ந்து 58.3 மில்லியன் வெள்ளி மதிப்பிலான 120 பேருந்துகளை சிங்கப்பூருக்கு விநியோகிக்கும்.