அடுத்த ஆண்டு ஜனவரியிலிருந்து பொருள் சேவை வரி (ஜிஎஸ்டி) மேலும் ஒரு விழுக்காடு கூடுகிறது.
ஆனால், ஃபேர்பிரைஸ் பேரங்காடி வாடிக்கையாளராக இருந்தால் அது பற்றிக் கவலைப்படத் தேவையில்லை.
அன்றாடம் தேவைப்படும் சில அத்தியாவசியப் பொருள்களுக்கான ஒரு விழுக்காடு வரி உயர்வை ஃபேர்பிரைஸ் ஏற்றுக்கொள்வதே அதற்குக் காரணம்.
வரி உயர்வின் பாதிப்பை மக்களுக்கு குறைக்கும் முயற்சியாக இந்த நடவடிக்கை இடம்பெறுகிறது என்று தீவு முழுவதும் சிறிய, பெரிய பேரங்காடிகளை நடத்தி வரும் ஃபேர்பிரைஸ் குழுமம் நவம்பர் 27ஆம் தேதியன்று தெரிவித்தது.
2024ஆம் ஆண்டின் முதல் பாதியில் அதாவது முதல் ஆறு மாதங்களுக்கு ஏறக்குறைய 500 பொருள்களுக்கு ஒரு விழுக்காடு வரி உயர்வை ஏற்றுக் கொள்வதாக அது அறிவித்துள்ளது.
2024 ஜனவரி 1ஆம் தேதி எட்டு விழுக்காட்டிலிருந்து 9 விழுக்காட்டுக்கு பொருள் சேவை வரி அதிகரிக்கிறது. 2023 ஜனவரி 1ஆம் தேதி தொடங்கப்பட்ட இரண்டு கட்ட வரி உயர்வின் இரண்டாவது முறையாக வரி உயர்வு அமலுக்கு வருகிறது.
பேரங்காடியில் வாடிக்கையாளர்கள் அடிக்கடி வாங்கும் பொருள்களுக்கு வரிக்கழிவு வழங்கப்படும் என்று குழுமம் தெரிவித்தது.
ஃபேர்பிரைஸ் சின்னப் பொருள்கள், உள்நாட்டுத் தயாரிப்புகள், பழங்கள், காய்கறிகள், இறைச்சி, தாள் பொருள்கள், சலவைப் பொருள்கள், வீட்டைச் சுத்தப்படுத்தும் திரவங்கள் போன்றவை 500 பொருள்களில் உள்ளடங்கியிருக்கும்.
ஃபேர்பிரைஸ் பேரங்காடி, ஃபேர்பிரைஸ் கடைகள், ஃபைனஸ்ட் கடைகள், ஃபேர்பிரைஸ் எக்ஸ்ட்ரா அதிபேரங்காடி, ஃபேர்பிரைஸ் இணையத் தளம் ஆகிய அனைத்திலும் ஒரு விழுக்காடு வரிக் கழிவு வழங்கப்படும்.
ஃபேர்பிரைஸ், கோப்பித்தியம், என்டியுசி ஃபுட்ஃபேர், என்டியுசி லிங்க் ஆகியவற்றையும் நடத்தி வரும் ஃபேர்பிரைஸ் குழுமம், முன்னோடித் தலைமுறை, மெர்டேக்கா தலைமுறை, சமூக சுகாதார உதவித் திட்ட நீல நிற அட்டைதாரர்கள் (சாஸ்) ஆகியோருக்கு 2024 டிசம்பர் 31ஆம் தேதி வரை வரிக்கழிவு நீட்டிக்கப்படும் என்று கூறியுள்ளது.
இதில் பயனடைய விரும்பும் வாடிக்கையாளர்கள் பணம் செலுத்தும் முகப்புகளில் தங்களுக்குரிய அட்டைகளை தேர்ந்தெடுத்து வரிக் கழிவைப் பெறலாம்.
அத்தியாவசியப் பொருள்களின் விலையேற்றச் சுமையைக் குறைக்க, குறிப்பாக நம்மிடம் அதிகம் பாதிக்கப்படக்கூடியவர்களுக்கு உதவ நிறுவனம் கடப்பாடு கொண்டிருப்பதாக ஃபேர்பிரைஸ் குழுமத்தின் தலைமை நிர்வாகி விபுல் சாவ்லா தெரிவித்தார்.
2019ஆம் ஆண்டிலிருந்து $780 மில்லியனுக்கு மேற்பட்ட தொகையைக் கழிவு, சலுகை, நன்கொடை என பல்வேறு வழிகளில் ஃபேர்பிரைஸ் வழங்கியுள்ளது.
2022ஆம் ஆண்டில் மட்டும் 200 மில்லியன் வெள்ளி இத்தகைய வழிகளில் உதவி செய்யப்பட்டுள்ளது. 2023ஆம் ஆண்டிலும் இதற்கு ஈடான தொகை வழங்கப்படும் என்று ஃபேர்பிரைஸ் குழுமம் தெரிவித்தது.