‘சிஜிஎல்’ எனப்படும் ‘கார்டுலைஃப் குரூப் லிமிடெட்’ நிறுவனம், சிங்கப்பூரில், பிரசவத்தின்போது வெளியாகும் நஞ்சுக்கொடி மற்றும் தொப்புள்கொடி ரத்தத்தைச் சேமித்து வைக்கும் சேவையை வழங்கி வருகிறது. இதற்கான உரிமத்தைப் பெற்று இந்நிறுவனம் செயல்பட்டு வருகிறது.
பின்னாளில் ஸ்டெம் செல் சிகிச்சைக்குத் தேவைப்படலாம் என்ற எண்ணத்தில் பெற்றோர் சிலர் இந்தச் சேவையை நாடுகின்றனர்.
ஆனால் ‘சிஜிஎல்’ நிறுவனத்தில் ரத்த வங்கியில் அவ்வாறு சேமிக்கப்பட்ட ரத்தம் உகந்த வெப்பநிலையில் பராமரிக்கப்படாததால், ஏறக்குறைய 2,150 வாடிக்கையாளர்கள் பாதிக்கப்பட்டது அண்மையில் தெரியவந்துள்ளது.
சுகாதார அமைச்சு, நவம்பர் 30ஆம் தேதி, இந்தத் தகவலை வெளியிட்டது.
அதையடுத்து, நஞ்சுக்கொடி ரத்தம், தொப்புள்கொடி ரத்தம் மற்றும் மனித உடல் திசுக்களைச் சேகரித்தல், பதப்படுத்துதல், சேமித்தல் ஆகிய சேவைகளை நிறுத்தும்படி ‘சிஜிஎல்’ நிறுவனத்திற்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
நோயாளிகளிடம் புதிதாக எந்த வகையான சோதனைகளை மேற்கொள்ளவும் அதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்த உத்தரவு ஆறு மாதங்களுக்கு நடப்பில் இருக்கும். இதுகுறித்து விளக்கமளிக்க நிறுவனத்திற்கு 14 நாள்கள் அவகாசம் வழங்கப்பட்டிருப்பதாக அமைச்சு கூறியது.
விசாரணை தொடர்கிறது. அபராதம் விதித்தல், வழக்குத் தொடுத்தல் உள்ளிட்ட கூடுதல் அமலாக்க நடவடிக்கைகள் குறித்துப் பரிசீலிக்கப்படுவதாக சுகாதார அமைச்சு குறிப்பிட்டது.