தோ பாயோவில் உள்ள விளையாட்டுத் திடலில் 13 வயது சிறுவனிடம் மின்சிகரெட் விற்க முயற்சி செய்த 18 வயது இளையர் கையும் களவுமாகப் பிடிபட்டுள்ளார்.
டிசம்பர் 1ஆம் தேதி வழக்கமான சோதனையில் விளையாட்டு மைதானத்தில் சந்தேக நபர் கைது செய்யப்பட்டதாக சுகாதார அறிவியல் ஆணையம் தெரிவித்தது.
அங்கு இளையர் ஒருவர் மின்சிகரெட்டுகளை விற்பதாக தகவல் கிடைத்ததையடுத்து ஆணையம் சோதனை நடத்தியது.
சந்தேக நபர் கைது செய்யப்பட்டதும் அவரது வீட்டை அதிகாரிகள் சோதனையிட்டனர். அங்கிருந்து 700க்கும் மேற்பட்ட மின்சிகரெட்டுகள் மற்றும் இதர உபகரணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. அதன் சந்தை மதிப்பு $15,400 இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இளையர் விசாரணையில் உதவி வருவதாக ஆணையம் மேலும் தெரிவித்தது.
தடை செய்யப்பட்ட மின்சிகரெட்டுகளை பொது இடத்தில் குறிப்பாக இளையர் மற்றும் மாணவர்களிடம் சட்டவிரோதமாக விற்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஆணையம் எச்சரித்தது.
சென்ற நவம்பர் 23ஆம் தேதி வெஸ்ட் மாலில் மின்சிகரெட்டுகள் மற்றும் உபகரணங்களை மாணவர்களுக்கு விற்ற 36 வயது ஆடவருக்கு $13,700 அபராதம் விதிக்கப்பட்டதாகவும் ஆணையம் கூறியது.
2018, 2019ல் மட்டும் மின்சிகரெட்டுகளைப் புகைத்ததற்காக 800 மாணவர்கள் அறிவியல் சுகாதார ஆணையத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.