இத்தாலிய ‘கிரேஹவுண்ட்’ இனத்தைச் சேர்ந்த கட்சு எனும் நாய், காணாமற்போய் கிட்டத்தட்ட 48 மணி நேரத்திற்குப் பிறகு அதிகாரிகளால் மீட்கப்பட்டது.
விரைவுச்சாலையில் விரைந்தோடிய அந்த நாயை மீட்பதற்கு வாகனமோட்டிகளும் காவல்துறையினருக்குக் கைகொடுத்தனர்.
கட்சுவின் உரிமையாளர் டெப்ரா லோய். தாதிமைத் தொழிலில் ஈடுபட்டுள்ள தன்னுரிமைத் தொழிலாளர் இவர்.
நவம்பர் 30ஆம் தேதி காலை 8 மணியளவில், திருவாட்டி லோயின் தாயார் கட்சுவை நடைப்பயிற்சிக்கு இட்டுச்சென்றார்.
மற்றொரு குடியிருப்பாளரின் நாய் வம்புக்கிழுத்த வேளையில், கட்சு அந்த முதிய பெண்மணியின் கைகளிலிருந்து கீழே குதித்துத் தப்பியோடியது.
கட்சுவைக் கண்டுபிடிக்க தானாகவே மேற்கொண்ட முயற்சி பலிக்காத நிலையில் அதைக் கண்டுபிடித்துத் தந்தால் $5,000 பரிசு தருவதாக சமூக ஊடகங்களில் அறிவித்தார் திருவாட்டி லோய்.
விலங்குவதைத் தடுப்புச் சங்கம், விலங்குநல, கால்நடை மருத்துவ அமைப்பு, நிலப் போக்குவரத்து ஆணையம் ஆகியவற்றுக்கும் தகவல் அளித்தார்.
‘இமாஸ்’ எனப்படும் விரைவுச்சாலை கண்காணிப்பு, ஆலோசனைக் கட்டமைப்பின் மீட்புப் பிரிவு கண்காணிப்பில் ஈடுபட்டது.
காலாங்-பாய லேபார் விரைவுச்சாலை, தீவு விரைவுச்சாலை ஆகியவற்றில் கட்சுவைக் கண்டதாக அவர்களில் சிலர் தகவல் தந்தனர்.
டிசம்பர் 1ஆம் தேதி அதிகாலை 4 மணி வரை நண்பருடன் தேடலில் ஈடுபட்ட திருவாட்டி லோய், பின்னர் காலை 6.30 மணி வரை தனியாகவே தேடினார். காலை 10 மணிக்கு ‘பென்’ எனும் ஓட்டுநர் ஒருவர் கட்சுவைக் கண்டதாகத் தகவல் தந்தார்.
சிறிது நேரத்தில் போக்குவரத்துக் காவல் அதிகாரிகள் அவரைத் தொலைபேசியில் அழைத்தனர். தன் வீட்டுக்கு அருகில் உள்ள காவல் நிலையத்திற்குச் சென்று கட்சுவைப் பெற்றுக்கொள்ள நினைத்திருந்த வேளையில் அதிகாரிகள் தாங்களே கொண்டு வந்து ஒப்படைத்தனர் என்று நெகிழ்ச்சியுடன் கூறினார் திருவாட்டி லோய்.
பின்னர் கால்நடை மருத்துவரிடம் கட்சுவை அழைத்துச் சென்றதாகவும் அதற்குக் காலில் சிராய்ப்புகள், கொப்புளங்கள் ஏற்பட்டிருந்தாலும் பெரிய அளவில் காயங்கள் இல்லை என்றும் கூறினார் திருவாட்டி லோய்.