கரிம வரி விகிதத்தை மாற்றுமுன் அரசாங்கம் அதன் நேரடி விலையுடன் மற்ற அம்சங்களான கரிம வெளியீட்டின் பாதகமான விளைவுகள், மற்ற நாட்டுக் கொள்கைகளுடன் ஒத்துப்போவது போனறவற்றையும் கருத்தில் கொள்ளும் என்று மூத்த அமைச்சர் டியோ சீ ஹியன் டிசம்பர் 5ஆம் தேதியன்று கூறினார்.
சிங்கப்பூர் நாணய ஆணைய பதவியிலிருந்து விலக உள்ள நிர்வாக இயக்குநர் ரவிமேனன், டிசம்பர் 4ஆம் தேதி, உலகில் பருவநிலை தொடர்பான நடவடிக்கைகளைத் துரிதப்படுத்தவும் புவி வெப்பமடைவதை எதிர்கொள்ளவும் கரிம வரி இன்னும் உயரும் எனத் தாம் நம்புவதாகக் கூறினார். இந்தப் பின்னணியில் திரு டியோ மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
சிங்கப்பூரின் கரிம வரி தற்பொழுது ஒரு டன் கரிம வெளியீட்டிற்கு $5 வெள்ளி என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது 2024ஆம் ஆண்டில் ஒரு டன் கரிம வெளியீட்டிற்கு $25 என்றும் 2026, 2027ஆம் ஆண்டுகளில் டன் ஒன்றுக்கு $45 ஆகவும் உயரும்.
இந்த வரி விகிதம் இறுதியில் 2030ஆம் ஆண்டில் டன் ஒன்றுக்கு $50லிருந்து $80 வரை இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐநாவின் காப் 28 என்ற பருவநிலை மாநாட்டில் கலந்துகொண்ட பின் அவரது நான்கு நாள் பயணத்தின் முடிவில் செய்தியார்களிடம் திரு டியோ பேசினார்.
அப்பொழுது, கரிம வெளியீடு குறித்த கட்டணம் சார்ந்த அம்சங்கள், கட்டணம் சாராத அம்சங்கள் என இருவிதமான அம்சங்களைக் கருத்தில்கொண்டு மற்ற நாடுகள் தங்கள் கொள்கைகளை எவ்வாறு வகுக்கின்றன என்பதை ஆராயும் என்று திரு டியோ விளக்கினார்.
சுவிட்சர்லாந்து, ஸ்வீடன் போன்ற சில நாடுகள் கரிம வரியாக ஒரு டன்னுக்கு குறைந்தது யூரோ 100 ($45) என நிர்ணயித்துள்ளன.
எரிசக்தி உருமாற்றத் திட்ட செலவினத்தை எவ்வாறு அரசு சமாளிக்கும் என்ற கேள்விக்கு, கரிம வரியில் கிடைக்கும் நிதி குடியிருப்புகளும் வர்த்தகங்களும், பசுமை வாழ்விற்கும் பசுமை பொருளியலுக்கும் ஏற்றவாறு மாறுவதற்கு உதவப் பயன்படுத்தப்படும் என்று மூத்த அமைச்சர் டியோ சீ ஹியன் பதிலளித்தார்.