பெய்ஜிங்: சிங்கப்பூருடனான சீனாவின் உறவுகள் இவ்வாண்டு மேம்படுத்தப்பட்ட நிலையில், அதனுடன் இணைந்து பெரும் இலக்குகளை எட்டும் விதமாக செயல்பட சீனா தயார் என்று சீனப் பிரதமர் லி கியாங் புதன்கிழமை தெரிவித்தார்.
இதன் தொடர்பில் டிசம்பர் 6ஆம் தேதி கருத்துரைத்த துணைப் பிரதமர் லாரன்ஸ் வோங், இவ்வாண்டின் சிங்கப்பூர், சீன அதிகாரிகளின் உயர்நிலை சந்திப்பு பரந்த அளவிலான அம்சங்கள் விவாதிக்கப்பட உள்ளதால் பயன்மிகுந்ததாக இருக்கும் என்று கூறினார்.
“சிங்கப்பூர் நண்பர்களுடனான அணுக்க கருத்துப் பரிமாற்றங்களை பல சந்தர்ப்பங்களில் நாங்கள் தொடர்ந்து கடைப்பிடித்து வந்திருக்கிறோம். அத்துடன், பல நிலைகளில் எங்கள் கருத்துப் பரிமாற்றங்கள் மேலும் அணுக்கமாகவும் பொருள் பொதிந்ததாகவும் மாறி வருகிறது.
“இவை யாவும் எங்கள் உறவு துடிப்பாகவும் வருங்காலத்தில் பெரும் சாத்தியக் கூறுகள் இருப்பதையும் எடுத்துக் காட்டுகிறது,” என்று அவர் கூறினார்.
சிங்கப்பூர் துணைப் பிரதமர் லாரன்ஸ் வோங் உடனான இருதரப்பு சந்திப்பின் தொடக்கத்தில் பெய்ஜிங்கில் உள்ள சீன மக்கள் மண்டபத்தில் பேசும்போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
நிதியமைச்சராகவும் உள்ள திரு லாரன்ஸ் வோங், சீனாவின் தியன்ஜின் நகருக்கு செவ்வாய்க்கிழமையன்று நான்கு நாள் பயணம் மேற்கொண்டார். சீனாவின் பெய்ஜிங் நகருக்கு கடந்த மே மாதம் பயணம் மேற்கொண்ட திரு வோங்குக்கு இது இரண்டாவது சீனப் பயணம்.
சீனாவின் பொருளியல், நிதிப் பிரச்சினைகளை கவனிக்கும் பொறுப்பேற்றிருக்கும் அந்நாட்டுத் துணைப் பிரதமர் ஹி லிஃபெங்கையும் திரு வோங் புதன்கிழமை காலை சந்தித்தார். .
இந்த சந்திப்புகளைத் தொடர்ந்து தானும் சீனப் பிரதமர் திரு லியும் இரு நாடுகளின் வலுவான உறவுகளை மறுஉறுதிப்படுத்தியதாகவும் இரு நாடுகளுக்கு இடையேயான ஒத்துழைப்பில் ஏற்பட்டுள்ள நல்ல முன்னேற்றம் குறித்து எக்ஸ் (முன்னர் டுவிட்டர்) தளத்தில் திரு வோங் பதிவிட்டுள்ளார்.
மேலும், துணைப் பிரதமர் லாரன்ஸ் வோங், சீனப் பிரதமர் லி இருவரும் இருதரப்புக்கும் பயனளிக்கும் ஒத்துழைப்பை இரு நாடுகள் முன்னெடுத்துச் செல்லவும் இரு நாட்டு மக்களிடையே, வர்த்தகங்களுக்கு இடையேயான பிணைப்பை அணுக்கமாக்கவும் ஒப்புக்கொண்டதாக பிரதமர் அலுவலக அறிக்கை விளக்கியது.