மின்சார வாகனங்களுக்கு மின்னேற்றும் சேவை வழங்கும் தனியார் நிறுவனங்களுக்கு புதிய விதிமுறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அதாவது 2024ஆம் ஆண்டின் இறுதிவாக்கில் வாடிக்கையாளர்கள் கியூஆர் குறியீடு அல்லது கடன் அட்டை பயன்படுத்தும் ஏற்பாடுகளை அவை செய்ய வேண்டும்.
தற்போது தனியார் நிறுவனத்தின் செயலிகள் அல்லது பற்று அட்டை மூலம் மின்சாரம் விற்கப்படுகிறது.
டிசம்பர் 8ஆம் தேதி அமலுக்கு வந்த மின்வாகனங்களுக்கான மின்னூட்ட சட்டத்தின்கீழ் உரிமம் பெறுவதற்கு தனியார் மின்னேற்றும் சேவை வழங்கும் நிறுவனங்கள் இந்தப் புதிய விதிமுறையைப் பூர்த்தி செய்ய வேண்டும். இதற்கு 12 மாதங்கள் அவகாசம் வழங்கப்படுவதாக நிலப் போக்குவரத்து ஆணையம் டிசம்பர் 7ஆம் தேதி அன்று அறிவித்தது.
புதிய சட்டத்தின்கீழ் டிசம்பர் 8ஆம் தேதிக்குப் பிறகு வாங்கிய மற்றும் நிறுவப்பட்ட அனைத்து புதிய மின்சார வாகனங்களுக்கான மின்னேற்றிகளை பயன்படுத்துவதற்கு முன்பு நிலப் போக்குவரத்து ஆணையத்திடம் பதிவு செய்ய வேண்டும்.